Apr 19, 2013
உள்நாட்டுப் பிரச்சனையில் தலையிடுவதா? வெனிசுலா அதிபர் கண்டனம்
Posted by AliffAlerts on 16:16 in NF | Comments : 0
கராகஸ்: வெனிசுலா அதிபராக நிக்கோலஸ் மடூரோ வெற்றி பெற்றது செல்லாது எனவும், மறு வாக்கு எண்ணிக்கையை நடத்தவேண்டும் என்றும் எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருதற்கு அதிபர் நிக்கோலஸ் மடூரோ கண்டனம் தெரிவித்துள்ளார். வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேசின் மறைவினை அடுத்து அங்கு கடநத சில வாரங்களுக்கு முன்பு தேர்தல் நடைபெற்றது. இதில் அவரது அரசியல் வாரிசான, நிக்கோலஸ் மடூரோ வெற்றி பெற்றார். அவரது வெற்றியை ஏற்றுக் கொள்ளாத எதிர்க்கட்சி வேட்பாளர் ஹென்றிக் கப்ரிலேஸ், ஓட்டுக்களை மீண்டும் எண்ண வேண்டுமென்று பிரச்சாரம் செய்து வருகின்றார். அமெரிக்க அரசும், இதற்கு ஆதரவாக பேசி வருகிறது. மடூரோவின் வெற்றியை அங்கீகரிக்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி,' வெனிசுலாவில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தவேண்டும். அங்கு பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றது தெரிந்தால், அங்குள்ள அரசாங்கத்தின் நம்பகத்தன்மை குறித்து நாங்கள் தீவிர கேள்விகளை எழுப்புவோம். இந்த பிரச்சினை இன்னும் முடியவில்லை.' என்று கூறினார். இந்த கருத்துக்கு நிக்கோலஸ் மடூரோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், வெனிசுலாவின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீடு, குறிப்பாக தேர்தல் சமையத்தின் போது அவர்களின் தலையீடு இழிவானதாகவும் கொடூரமானதாகவும் இருக்கிறது என்றார். பூஸ்வாக்கள், நிலப்பிரபுகளுடன் இணைந்து கொண்டு அமெரிக்காவின் நடவடிக்கைகள் மிகவும் கேவலமானதாக இருக்கிறது. ஜான் கெர்ரி வெனிசுலாவை கவனிப்பதை விட்டுவிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவின் அங்கீகாரம் தனக்கு தேவையில்லை என்றும், அமெரிக்க தூதரகத்தின் நிதியுதவியுடன், வலதுசாரிக் கட்சியினர் திடீர் சதிப்புரட்சி ஒன்றுக்கு திட்டமிடுவதாகவும் மடூரோ குறிப்பிட்டுள்ளார். வெனிசுவேலா பொதுத் தேர்தல், உலகை மீண்டும் வலதுசாரி, இடதுசாரி முகாம்களாக பிரித்து வருகின்றது. இடதுசாரி தலைவர்கள் ஆளும் லத்தீன் அமெரிக்க நாடுகள், மடூரோவின் வெற்றியை அங்கீகரித்துள்ளன. அமெரிக்காவை பின்பற்றி, வலதுசாரிக் கட்சிகள் ஆளும் ஸ்பெயினும், கொலம்பியாவும், இன்னபிற நாடுகளும் மடூரோவின் தேர்தல் வெற்றியை அங்கீகரிக்க மறுத்து வருகின்றன. மடூரோ மிகச் சிறிய ஒட்டு வித்தியாசத்தில் வென்றதை சுட்டிக் காட்டி, வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டுமென கோரி வருகின்றன. இதற்கிடையே, வெனிசுவேலாவில், பெருந்தொகையான வாக்குச் சீட்டுகள், கியூபா மருத்துவர்கள் பணியாற்றும் இலவச மருத்துவமனைகளுக்குள் ஒளித்து வைக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் பரப்பப்பட்டன. அதைத் தொடர்ந்து, பல இலவச மருத்துவமனைகள் பாசிசக்யர்களினால் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. மறைந்த சாவேசின் ஆளும் கட்சியான, அலுவலகங்களும் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளன. இது வரையில், எட்டு PSUV கட்சி உறுப்பினர்கள்/ஆதரவாளர்கள் கொல்லப் பட்டுள்ளனர். மீண்டும் வாக்குகளை எண்ணுவதற்கு, தேசியதேர்தல் ஆணையகம் (CNE) மறுத்து விட்டதால், அவற்றின் அலுவலகங்களும் வலதுசாரிகளினால் தாக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையகத்தில் பணியாற்றிய உறுப்பினர்களின் வீடுகளும் தாக்கப்பட்டன.