பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களோடு வட மாகாணசபைத் தேர்தலை நடத்தக்கூடாது. இராணுவத்தினர் தமது உயிர்களை தியாகம் செய்து இந்த நாட்டினை விடுதலைப்புலிகளிடம் இருந்து காப்பாற்றியுள்ளனர். இன்னொரு முறை இந்த நாட்டில் பிரிவினை வாதத்திற்கு இடமளிக்கக்கூடாது என தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் பியசிறி விஜயநாயக்க தெரிவித்தார்.
பத்தரமுல்லயில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் இன்று அனைத்து மக்களும் மாகாண சபை முறைமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். பெரும்பாலான கட்சிகள் கூட இம் முறைமை வேண்டாம். என்றே கூறுகின்றனர். எனவே அரசாங்கம் இப்போது சரியான ஒரு அரசியல் தீர்மானத்தினை எடுக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றது.
நாம் நினைக்கவில்லை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டினை பிரித்துக் கொடுப்பார் என்று. அவ்வாறு ஏதும் தவறு விளைவிக்கப்படுமாயின் அதனை தடுக்க எல்லா விதமான நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுப்போம் எனவும் அவர் மேலும் கூறினார்.
May 31, 2013
வடக்குத் தேர்தலை நடத்த இடமளிக்கக் கூடாது : பியசிறி
Posted by AliffAlerts on 10:38 in NL | Comments : 0