இஸட் புள்ளி விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்ட்ட நான்கு முன்மொழிவுகளில் மூன்றாவது முன்மொழிவை உயர்நீதிமன்றம் இன்று சிபாரிசு செய்தது. இந்த மூன்றாவது முன்மொழிவானது, பல்கலைக்கழக மானியங்களுக்கு ஏற்கெனவே அனுமதிக்கத் தீர்மானித்திருந்த மாணவர் தொகையைவிட 4928 பேரை மேலதிகமாக சேர்த்துக்கொள்வதற்கு வகை செய்வதாகும்.

பிரதம நீதியரசர் ஷிரானி ஏ. பண்டாரநாயக்க, நீதியரசர்கள் என்.ஜி.அமரதுங்க, கே.ஸ்ரீபவன் ஆகியோர் நீதியரசர்கள் குழாமில் காணப்பட்டனர்.
புதிய பாடத்திட்டம், பழைய பாடததிட்ட மாணவர்களை வெவ்வேறு வகையினராக கருதி புதிய தேசிய சிறப்புத் தகைமை, மாவட்ட சிறப்புத் தகைமையின் தரப்படுத்தல்நிலை பட்டியல்களை வெளியிடும்படி பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவுக்கு பிரதம நீதியரசர் இன்று ஆலோசனை கூறினார்.
இந்த தரப்படுத்தல் பட்டியலை செப்டெம்பர் 10 ஆம் திகதிக்குமுன்னர் தாமதமேதுமின்றி வெளியிடும்படி, பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்துக்கு பணிக்கும்படி பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவுக்கு அவர் ஆலோசனை கூறினார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சார்பில் தோன்றிய வழக்குரைஞர் பாயிஸ் முஸ்தபா, பல்கலைக்கழக மாணவர் அனுமதி தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் வகுத்திருப்பதாக கூறினார்.
முதலாவது முறையின்படி 3675 மாணவர்கள் கூடுதலாக அனுமதிக்கப்படுவர் எனவும் இரண்டாவது முறையின்படி 3048 மாணவர்கள் கூடுதலாக அனுமதிக்கப்படுவர் எனவும் மூன்றாவது முறையின்படி 4928 மாணவர்கள் கூடுதலாக அனுமதிக்கப்படுவர் எனவும் நான்காவது முறையின்படி 4457 மாணவர்கள் கூடுதலாக அனுமதிக்கப்படுவர்.
இவற்றுள் ஆகக்கூடுதலாக மாணவர்களை அனுமதிக்கும் மூன்றாவது முறையை பிரதம நீதியரசர் சிபாரிசு செய்தார்.
தற்போது பல்கலைக்கழகங்களுக்கு 21000 மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இம்முறை ஒவ்வொரு பீடத்துக்கும் 25 சதவீத மாணவர்களை கூடுதலாக அனுமதிக்கலாம் என பிரதம நீதியரசர் கருத்துரைத்தார்.
இந்த வழக்கு செப்டெம்பர் 12 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.