BREAKING NEWS

Mar 1, 2013

மயக்க மருந்து கொடுத்து 17 போலீஸாரை சுட்டுக் கொன்ற 2 தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானில் 17 போலீசார் தலிபான்களால் உணவில் மயக்க மருந்து கொடுக்கப்பட்டபின் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கான் போலீஸ் பிரிவில் ஊடுருவி பயிற்சி பெற்ற தலிபான்களே, தமது சக போலீஸ்காரர்கள் மயங்கியபின் க்ளோஸ் ரேஞ்ச்சில் சுட்டுக் கொன்றுள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள காஜ்னி மாகாணம், தலிபான் மற்றும் அல்கய்தா பிரிவினரின் ஆதிக்கம் நிறைந்த பகுதி. இங்குள்ள போலீஸ் முகாம் ஒன்றில் 19 போலீஸார் இருந்தனர். இவர்களில் 2 பேர், தலிபான்களால் போலீஸில் சேர அனுப்பி வைக்கப்பட்டவர்கள்.

அவர்கள் தம்மீது யாருக்கும் சந்தேகம் ஏற்படாமல் போலீஸில் இணைந்து, பணிபுரிந்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு போலீசார் சாப்பிடும் சாப்பாட்டில் இந்த இருவரும் மயக்க மருந்து கலந்தனர். மருந்து கலந்த சாப்பாட்டை 17 போலீசார் சாப்பிட்டனர்.

பின்னர் அவர்கள் மயங்கியதும் இந்த இருவரும், துப்பாக்கியால் மயங்கிய போலீஸாரை மார்புக்கு அருகே க்ளோஸ் ரேஞ்சில் சுட்டு கொன்றனர்.

சுட்டுவிட்டு தப்ப முயன்ற 2 தீவிரவாதிகளும் கைது செய்யப்பட்டதாக சில ஊடகங்கள் தகவல் தெரிவித்தன. ஆனால், அதை மறுத்துள்ள தலிபான் அமைப்பு, போலீஸாரை சுட்டுக் கொன்ற இருவரும், பத்திரமாக தம்மிடம் வந்து சேர்ந்திருப்பதாக அறிவித்துள்ளது.

ஆப்கான் போலீஸ், மற்றும் ராணுவத்தில் தமது ஆட்கள் ஏராளமாக ஊடுருவி இருப்பதாகவும், தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &