சிங்கப்பூர் - மத்திய செரங்கூன் பகுதி வர்த்தக நிலையமொன்றில் வைத்து இல்லத்தரசி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இலங்கை பிரஜைக்கு மூன்று வருட சிறை, ஒன்பது பிரம்படி, ஆயிரம் சிங்கப்பூர் டொலர் அபராதம் என தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய செரங்கூனில் உள்ள தேநீர் கடையொன்றுக்கு சென்ற 47 வயதுடைய இல்லத்தரசியை 31 வயதுடைய இலங்கை நபரான ரூப்பசிங்க ஆரச்சிகே அனில் பெரேரா என்பவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.
சிங்கப்பூர் நேரப்படி இந்த சம்பவம் கடந்த நவம்பர் 24ம் திகதி காலை 10.40 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
கவலையான மனநிலையில் தேநீர் கடைக்குச் சென்ற பெண்ணை குறித்த இலங்கையர் வழிமறித்து அவரை கட்டிப்பிடிக்க முயற்சித்துள்ளார். அதன் போது பெண் பொலிஸாரை கூப்பிடப்போவதாக கூச்சலிட்ட பின் அப்பெண்ணை விடுவித்துள்ளார்.
எனினும் பின்னர் தன்னை பின்தொடருமாறு இலங்கை நபர் குறித்த பெண்ணை மிரட்டியதை அடுத்து குறித்த பெண்ணும் பயத்தில் அவரை பின் தொடர்ந்துள்ளார்.
தேநீர் கடையின் ஆளில்லாத இடத்திற்கு பெண்ணை அழைத்துச் சென்ற இலங்கையர் பலாத்காரமாக பெண்ணினது உள்ஆடைகளை கலைந்து கட்டித்தழுவி முத்தமிட்டு அவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்துள்ளார்.
அதன் போது ஆணின் பிடியில் இருந்து தப்பிக்க பெண் முயற்சித்த போதும் அவரால் முடியவில்லை. அப்போது யாரோ வருவதாக பெண் கூச்சலிட்ட பின் குறித்த நபர் பெண்ணை விடுவித்துள்ளார்.
பெண் பொய்கூறியதை அறிந்த இலங்கை நபர் தன்னை பின் தொடருமாறு கூறி பெண்ணை பூங்கா ஒன்றுக்கு அழைத்துச் சென்று அவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திவிட்டு தனது தொலைபேசி இலக்கத்தையும் வழங்கிச் சென்றுள்ளார்.
சம்பவத்தை அடுத்து வீட்டுக்குச் சென்ற பெண் கவலையாக இருப்பதை அறிந்த அவரது மகன் கேள்வி எழுப்பியதை அடுத்து பெண் நடந்தவற்றை கூறியுள்ளார்.
அதன் பின்னர் உடனடியாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு இலங்கை சந்தேகநபரான ரூப்பசிங்க ஆரச்சிகே அனில் பெரேரா கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்ட நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவே அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.