(PUTTALAM ONLINE)
மன்னார் மறிச்சிக்கட்டி,மரைக்கார் தீவு மக்களின் காணிப் பிரச்சினைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் துரித நடவடிக்கை எடுத்து தீர்வு கண்டுள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுத்தீன் ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கும் செய்தியில் எந்த விதமான உண்மையும் கிடையாது என அக்கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் மௌலவி மஹ்மூத் தௌபீக் தெரிவித்தார்.
மன்னார் நகரிலுள்ள ‘பயாபக்’ விடுதியில் இன்று (29.04.2014) செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மன்னார் மறிச்சிக்கட்டி மரைக்கார் தீவு கிராம அபிவிருத்திச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பத்திரிகையாளர் மாநாட்டில் சங்கத்தின் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். அதிகளவான பத்திரிகையாளர்களும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது மௌலவி மஹ்மூத் தௌபீக் மேலும் தெரிவித்ததாவது:
கடந்த மூன்று தினங்களாக தேசிய பத்திரிகைகளிலும், இணையதளங்களிலும் எமது மக்களின் மீள்குடியேற்றக் காணிப் பிரச்சினையில் அமைச்சர் றிஸாட் பதியுத்தீன் அவர்கள் தலையிட்டு நடவடிக்கை எடுத்த வகையில் அமைச்சர் பஸில் ராஜபக்ஸ விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் துரித கவனம் செலுத்தி மரைக்கார் தீவிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் எமது மக்களுக்காக ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த காணியில் 50 ஏக்கர் காணியை ஒதுக்கியுள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுத்தீன் அறிக்கைகளை வெளியிட்டிருந்தார்.
அவரது இந்த அறிக்கை எமக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்தது. இது தொடர்பில் நாம் எமது மக்களின் மீள்குடியேற்ற விவகாரத்தில் பெரிதும் அக்கறை செலுத்தி வந்த மற்றொரு வட மாகாண சபை உறுப்பினரான அஸ்மின் அய்யூப் அவர்களைத் தொடர்பு கொண்டு வினவியபோது, அதுபற்றி தனக்கு எதுவும் தெரியாதென்றும், மாகாண சபைக் கூட்டத்திற்கு வருகை தரும் சக உறுப்பினர் றிப்கான் பதியுத்தீனிடம் இதுபற்றிக் கேட்டறிந்து பதிலளிப்பதாகவும் தெரிவித்தார்.
பின்னர் வட மாகாண சபைக் கூட்டம் நடைபெற்ற பின் அஸ்மின் அய்யூப் அவர்களும் இதுதொடர்பான அறிக்கையொன்றை ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்தார். அவ்வறிக்கையில், தான் சக உறுப்பினர் றிப்கான் பதியுத்தீனிடம் இதுபற்றி நேரில் வினவியதாகவும், தனக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே தான் அவ்வாறு ஊடகங்களுக்கு அறிக்கை வழங்கியிருந்ததாகவும், உத்தியோகபூர்வமாக எந்தவிதமான அறிவிப்புக்களும் தனக்கு கிடைக்கவில்லையென்றும், அதனால் இதனை தன்னால் உறுதிப்படுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.
ஜனாதிபதியின் மேற்படி துரித நடவடிக்கை காரணமாக எமது மக்களின் மீள் குடியேற்றத்திற்காக 50 ஏக்கர் காணி வழங்கப்படுவதாக முசலி பிரதேச செயலாளரிடமிருந்தோ அல்லது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடமிருந்தோ எமக்கும் எத்தகைய உத்தியோகபூர்வமான அறிவிப்புக்களும் கிடைத்திருக்கவில்லை. மேற்கண்ட தகவல்களின் அடிப்படையில் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுத்தீன் ஊடகங்கள் மூலம் வெளியிட்டிருக்கும் குறித்த அறிக்கையில் எந்த விதமான உண்மையும் இல்லையென்பதை மீள்குடியேற்றத்திற்காக அல்லற்பட்டுக் கொண்டிருக்கும் எமது மக்களின் சார்பாக நாம் இத்தால் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இப்பிரதேசத்திலுள்ள எமது சொந்தப் பூர்வீகக் காணிகளில் மீள்குடியேறுவதற்காகத் தயாராகிய நிலையிலுள்ள 129 குடும்பங்களைச் சேர்ந்த நாம் கடந்த இரு மாதங்களாக பல்வேறு இன்னல்களுக்கும், எச்சரிப்புக்களுக்கும் உள்ளாகிய நிலையில் இங்கே அல்லற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். எமது காணிப் பிரச்சினைக்கும், மீள்குடியேற்றத்திற்கும் தீர்வொன்றைப் பெற்றுத் தருவதற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தேசிய “எந்தத் தீர்வையும் எமக்கு இதுவரை எவரும் வழங்கவில்லை” – மறிச்சிக்கட்டி மக்கள் சூறா சபை உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புக்களும், பிரமுகர்களும் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அமைச்சர் றிஸாட் பதியுத்தீன் அவர்களின் முயற்சியின் பேரில் அமைச்சர் பஸில் ராஜபக்ஸ அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் எமக்கு 50 ஏக்கர் காணிகளை வழங்கியுள்ளதாகவும், அதற்காக பாதிக்கப்பட்ட எமது மக்களின் சார்பில் தான் நன்றி தெரிவிப்பதாகவும் வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுத்தீன் அவசரமானதும், உண்மைக்குப் புறம்பானதுமான அறிக்கையொன்றை வெளியிட்டிருப்பதானது எமது மனங்களை மாத்திரமல்ல, எமக்காகக் குரல் கொடுத்த, நடவடிக்கைகள் எடுத்து வந்த பலரது மனங்களையும் காயப்படுத்தியுள்ளது.
மீள்குடியேற்றத்திற்காக அல்லலுற்றுக் கொண்டிருக்கும் எமது மக்களுக்கு யார் நடவடிக்கை எடுத்து ஜனாதிபதி அவர்கள் காணியை வழங்குமாறு பணித்திருந்தாலும் அதற்காக இந்த அரசாங்கத்திற்கும், ஜனாதிபதி அவர்களுக்கும், எமக்காகக் குரல் கொடுத்தவர்களுக்கும் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிக்க வேண்டியது நாங்களேயாகும். அதனை நாங்கள் நிச்சயமாகவே நன்றி விசுவாசத்துடன் செய்வோம். ஆனால் தீர்வு எதுவும் கிடைக்காத நிலையில் யாரும் யாருக்கும் நன்றி தெரிவித்து தங்களது சொந்த அரசியல் இருப்புக்கு அரண் அமைத்துக் கொள்ளும் முயற்சியினை நாகரீகமற்ற செயற்பாடாகவே நாம் பார்க்கின்றோம்.
எனவே தொடர்ந்தும் அமைச்சர் றிசாட் பதியுத்தீன் அவர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் எமது மக்களின் மீள்குடியேற்ற விடயத்தில் கட்சி அரசியல் பேதமின்றி அரசாங்கத்திடமும், ஜனாதிபதியிடமும் வலியுறுத்துமாறு நாம் வினயமாகக் கேட்டுக் கொள்வதுடன், இதுவரைக்கும் எமது மக்களின் மீள்குடியேற்ற விவகாரத்தில் அக்கறையுடன் தலையிட்டு செயற்பட்டு வந்துள்ள அனைத்துத் தரப்பினருக்கும் நாம் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என அவர் தெரிவித்தார்.
VAT