ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் நவனீதம்பிள்ளை 7 நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை நாளை இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் முதலில் ஐநாவின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார்.
இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்ஸ மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெஷில் ராஜபக்ஸ ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
நீதியமைச்சர் ரவூஃப் ஹக்கிம், பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், சட்டமா அதிபர் பாலித்த பெர்னான்டோ ஆகியோரையும் நவநீதம்பிள்ளை சந்திப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளார்.
யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலைக்கு விஜயம் செய்யவுள்ள நவனீதம்பிள்ளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஆளுநகர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக ஐநாவின் உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் பேச்சுவாரத்தைகளை நடாத்தவுள்ளார்.
இந்த வருடத்தின் ஆரம்பத்தில், ஜெனிவாவில் இடம்பெற்ற ஐநா மனித உரிமைகள் பேரவையின் 22 ஆவது கூட்டத் தொடரின்போது இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்காவின் பிரேரணைக்கு அமையவே நவநீதம்பிள்ளை இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயம் தொடர்பான தகவல்கள் இலங்கை தொடர்பான கோவையுடன் இணைத்துக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.