BREAKING NEWS

Aug 8, 2013

ANCHOR , MALIBAN , DIAMOND பால்மா விற்பனையி லிருந்து விலக்கு: சுகாதார அமைச்சு


பால்மா சம்பந்தமான அனைத்து வர்த்தக விளம்பரங்களையும் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் மறு அறிவித்தல் வரை தடை செய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. நேற்று 7ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சுகாதார அமைச்சு இந்தத் தீர்மானத்தை வெளியிட்டுள்ளது.
 .
பால் மா தொடர்பாக தற்போது எழுந்துள்ள நெருக்கடியான நிலைமையைக் கருத்திற் கொண்டு அனைத்து பால் மா வகைகளையும் பரிசோதனைக்கு உட்படுத்த சுகாதார அமைச்சின் உணவு ஆலோசனைக்குழு தீர்மானித்துள்ளது.
 .
இதற்கிணங்க டிசிடி இரசாயனம் தொடர்பில் மீண்டும் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன் ‘வை புரோட்டீன்’ பால் மாக்களில் உள்ளடக் கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் ‘குளொஸ்ட்ரீ டியம் பொட்டுலீனம்’ பக்டீரியா உள்ளதா என்பதைக் கண்டறியும் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
 .
இது தொடர்பான தீர்மானத்தை நேற்றுக்கூடியுள்ள சுகாதார அமைச்சின் உணவு ஆலோசனைக்குழு மேற்கொண்டதாகவும் அமைச்சு தெரிவித்தது. இந்தப் பரிசோதனைகளின் அறிக்கைகள் கிடைக்கும் வரை செயற்படுத்தப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் 1980 26ம் இலக்கத்தைக் கொண்ட உணவுச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தினால் இத்தீர்மானங்களுக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 .
இதேவேளை; பால் மா தொடர்பில் எழுந்துள்ள நிலமையைக் கருத்திற்கொண்டு நேற்று உணவு ஆலோசனைக் குழுவினால் முன்வைக்கப்பட்ட சிபாரிசுக்கு அமைய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மஹிபால சில தீர்மானங்களை எடுத்துள்ளார்.
 .
இதற்கிணங்க டிசிடி இரசாயனம் உள்ளடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் பால்மாவின் மாதிரி நேற்று முதல் கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்தின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
 .
அத்துடன் மேற்படி நிறுவனத்தினால் டிசிடி இரசாயனம் கலக்கப்பட்டுள்ளதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள பால் மா வகைகளை விற்பனையிலிருந்து விலக்கிக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க மெலிபன் நிறுவனம், பொன்டேரா நிறுவனம், ஜீ. எம். மொகமட் அலி நிறுவனம் ஆகியவற்றுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்தினால் டிசிடி உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட அங்கர் 1+, அங்கர் முழு ஆடைப் பால் மா, மெலிபன் முழு ஆடைப் பால்மா, டயமண்ட் முழு ஆடைப் பால்மா ஆகியவற்றை உடனடியாக வர்த்தக நிலையங்களிலிருந்து விலக்கிக்கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 .
மேற்படி பால் மாதிரிகள் பெறப்பட்டு மீண்டும் அவற்றில் டிசிடி உள்ளதா என்பதைப் பரிசோதிக்கும் வகையில் அவை கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவற்றில் டிசிடி இரசாயனம் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவற்றை தடை விதிக்கவும் தீர்மானிக்கப்படும்.
இந்த நடவடிக்கைகள் செயற்படுத்தப்படுகிறதா என கண்காணிக்குமாறு சகல மாகாண சுகாதார சேவை பணிப்பாளர்கள் மற்றும் பிரதேச சுகாதார சேவைப் பணிப்பாளர்கள், தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவனம் ஆகியவற்றுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இதற்கிணங்க அனைத்துப் பால்மா வகைகள் தொடர்பாக அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் வெளியாகும் விளம்பரங்களுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச் சின் உணவு ஆலோசனைக் குழு அறிவித்துள்ளது.
 .
நியூசிலாந்தில் தயாரிக்கப்படும் பால்மா வகைகளில் இரசாயன பதார்த்தம் கலந்திருப்பதாக விடுக்கப்பட்டு வரும் எச்சரிக்கையையடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அத்துடன் இறக்குமதி செய்யப்படும் சகல பால் .மாவகைகளையும் பரிசோ தனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள தாகவும் அக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கிணங்க மறு அறிவித்தல் வரை அனைத்துப் பால்மா விளம்பரங்களையும் வெளியிடுவதை தற்காலிகமாகக் இடைநிறுத்துமாறு அக்குழு நிறுவனங்களின் பிரதானிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.  பரிசோதனைகளின் அறிக்கைகளையடுத்தே அதன் பிரதிபலிப்புக்கமைய அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் அக்குழு தெரிவிக்கின்றது.
 .
இதேவேளை; நச்சு இரசாயனம் கலக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இறக்குமதி செய்யப்பட்ட பால்மா வகைகளை விற்பனைக்குத் தடை செய்யுமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சைக் கோரியுள்ளது. அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலுடன் அரசாங்கம் மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் இணைந்த குழுவொன்று நியமிக்கப்பட்டு பால் மா தொடர்பிலான பிரச்சினைகள் பற்றி ஆராயப்பட வேண்டுமெனவும் அந்த சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
 .
- தினகரன் -

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &