எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இராணுவத்தினர் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார்.
விசேடமாக மத்திய மாகாண சபையில் இது நடப்பதாகவும் இதன்மூலம் வட மாகாண சபை தேர்தல் குறித்து தன்னால் ஊகித்துக் கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் இன்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
´ஐதேக தலைவர் யாழ்ப்பாணம் சென்றபோது ஆயுதம் ஏந்திய குழுவந்து அவருக்கு இடையூறு ஏற்படுத்தினர். அதுபோன்தே தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு நடந்துள்ளது.
இதனை எதிர்த்து 17ம் திருத்தச் சட்டத்தில் உள்ளபடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய முடியும். ஆனால் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறை இருப்பதால் அவ்வாறு முறையிட்டும் பலனில்லை. அதனால்தான் 17வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு நாம் கூறுகிறோம்´.
இதேவேளை, இங்கு கருத்து வெளியிட்ட ஊவா மாகாண சபை உறுப்பினர் கே.வேலாயுதம், 13ம் திருத்தம் அவ்வாறே அமுல்படுத்தப்பட வேண்டும் என குரல் கொடுத்த ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று மௌனம் காப்பதாக தெரிவித்தார்.
தங்களை புலிகள் என அரசாங்கம் முத்திரை குத்தும் அதேவேளை, புலிகளுடன் தீவிரவாதிகளாக செயற்பட்ட சிலர் ஆளும் கட்சியில் தேர்தலில் போட்டியிட தயாராவதாகவும் அது தொடர்பில் அரசு ஒன்றும் பேசுவதில்லை எனவும் வேலாயுதம் குறிப்பிட்டார்.