சீனாவில் வேற்றுக் கிரகவாசி!: மீண்டும் பரபரப்பு
Posted by
AliffAlerts
on
17:45
in
ET
NF
|
வேற்றுக் கிரகவாசிகள் தொடர்பான செய்திகள், கதைகள் என்றும் சுவாரஸ்யமானவை.
இவை உண்மையெனக் கூறி விஞ்ஞான உலகின் ஒரு சாராரும் இல்லை பொய் கட்டுக்கதையென எனக்கூறி மற்றொரு சாராரும் இரண்டாக பிரிந்து நிற்கின்றனர்.
இன்றளவும் முற்றிலும் நிரூபிக்க முடியாமல் ஆராய்ச்சியாளர்கள் திணறிவருகின்றபோதும். இவை தொடர்பான செய்திகளுக்கு என்றுமே முடிவில்லை.
இந்நிலையில் வேற்றுக் கிரகவாசிகள் , அடையாளங் காணப்படாத பறக்கும் பொருள் (UFO) தொடர்பான செய்திகள் மீண்டும் ஊடகங்களில் உலாவரத் தொடங்கியுள்ளன.
அவற்றில் ஒன்று சீனாவைச் சேர்ந்த நபரொருவர் வேற்றுக் கிரகவாசினுடைய உடல் எனக் கூறி படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

குறித்த நபரின் பெயர் லீ , அவர் வேற்றுக் கிரகவாசினுடையது எனக் கூறப்படும் உடலை தனது வீட்டிலுள்ள குளிர்சாதனப் பெட்டியினுள் வைத்தே படமெடுத்துள்ளார்.

சீனாவின் சண்டொங் மாகாணத்தின் பின்சூ பகுதியில் உள்ள யெலோ ரிவர் பகுதியில் அடையாளங் காணப்படாத பறக்கும் பொருட்களைக் கண்டதாக லீ தெரிவித்துள்ளார்.

பின்னர் அவற்றில் ஒன்று பூமியில் விழுந்ததாகவும் அவ்விடத்தில் தான் சென்று பார்த்த போது வேற்றுக்கிரக வாசியொருவரது உடலை முயலுக்காக வைக்கப்பட்டிருந்த பொறியில் கண்டதாகவும் அதனை தான் எடுத்து வந்ததாகவும் லீ தெரிவித்துள்ளார்.
எனினும் லீ சொல்வது அனைத்தும் கட்டுக் கதை எனவும் வேற்றுக் கிரகவாசியினது உடல் என அவர் கூறுவது உயர் ரக றப்பரினால் செய்யப்பட்ட பொம்மை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இப்புகைப்படங்கள் தொடர்பில் சீன சமூகவலையமைப்புகளில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
லீயின் கதை ஒரு பக்கமிருக்க மற்றுமொரு சுவாரஸ்ய சம்பவம் அதுவும் அடையாளங் காணப்படாத பறக்கும் பொருளுடன் சம்பந்தப்பட்ட செய்தியொன்றும் வெளியாகியுள்ளது.
சீனாவிலிருந்தே இச் செய்தியும் வெளியாகியுள்ளது.
ஆம், சீனாவில் சுமார் 26,000 அடி உயரத்தில் பறந்த விமானமொன்றின் முன் பகுதியில் அடையாளங் காணப்படாத பொருளொன்று மோதியதால் அவ்விமானம் உனடியாக தரையிறக்கப்பட்டுள்ளது.

எயார் சைனா விமான சேவைக்கு சொந்தமான போயிங் 757 விமானமொன்றே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானம் பறந்து கொண்டிருக்கும் போது சத்தத்துடன் பாரிய பொருளொன்று விமானத்தின் முன் பகுதியில் மோதியுள்ளது.
இதனையடுத்து விமானிகளால் விமானத்தை சில நிமிடங்களுக்கு கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளது. உடனே கட்டுப்பாட்டறையுடன் தொடர்புகொண்ட விமானிகள் விமானத்தை உடனடியாக தரையிறக்கியுள்ளனர்.
விமானத்தை தரையிறக்கிய உடன் அதன் முன் பகுதியில் பள்ளமொன்று ஏற்பட்டிருப்பதை அதிகாரிகள் அவதானித்துள்ளனர்.
அடையாளங் காணப்படாத பொருளொன்று விமானத்துடன் மோதியுள்ளதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

ஆரம்பத்தில் இது பறவை மோதியதால் இடம்பெற்றிருக்கலாம் எனக் கூறப்பட்ட போதிலும் அதற்கான தடயமெதுவும் குறிப்பாக இரத்தக் கறையோ, இறகுகளோ இல்லையென்பதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
சிலர் நீராவி மோதியதால் இப் பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கின்றனர்.
இதேவேளை அடையாளங் காணப்படாத பறக்கும் பொருட்கள் தொடர்பான முன்னாள் அரச ஆராய்ச்சியாளரான நிக் போப் குறித்த விமானத்தின் முன் பகுதியை ஆராய்ந்தால் இதற்கான காரணத்தை அறிந்துகொள்ள முடியுமெனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல பிரித்தானிய வான் பகுதியில்அடையாளங் காணப்படாத பறக்கும் பொருட்களை கண்டதாக 3 பயணிகள் விமானங்களின் விமானிகள் தெரிவித்திருந்தனர்.
இதேபோல இந்திய - சீன எல்லையில் கடந்த வருடம் தொடர்ச்சியாக அடையாளங் காணப்படாத பறக்கும் பொருட்கள் அவதானிக்கப்பட்டன.
இது சீனா அண்டைய நாடுகளிடையே உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தும் பொருட்டு மேற்கொண்டவையென இந்தியா குற்றஞ்சாட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.