BREAKING NEWS

May 2, 2013

வடக்கில் முஸ்லிம்களை மீள் குடியேற்றாது தேர்தல் நடாத்தக் கூடாது - அ.இ.மு.க

வடக்கில் முஸ்லிம்களை மீள்குடியேற்றாது தேர்தல் நடாத்தக்கூடாது - அ.இ.மு.க
முஸ்லிம்கள் வடக்கில் மீள்குடியேற்றப்பட்டு வாக்களிக்கும் உரிமை உறுதிப்படுத்தும் வரை தேர்தல் இடம்பெறக்கூடாது என அகில இலங்கை முஸ்லீம் காங்கிரசின் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்துள்ளார். 

அவர் இன்று (02) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

இவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

வட புலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் பூர்த்தி செய்யப்பட்டு அவர்கள் அங்கு வாக்களிக்கின்ற உரிமை உறுதிப்படுத்தப்படும் வரை அங்கு வடமாகாண சபை தேர்தல் நடத்தப்படக் கூடாது இவ்வாறு இடம்பெற்றால் எமது கட்சி அதனை எதிர்க்கும். இவ்விடயம் குறித்து சில தினங்களுக்கு முன்னர் நாம் கருத்து தெரிவித்திருந்தோம், 

அதனை தொடர்ந்து முஸ்லிம்களின் பிரதான கட்சியென்று உரிமை கோறுகின்ற கட்சியொன்று தங்களது உயர் பீட கூட்டத்தில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக வடமாகாண சபை தேர்தல் நடத்தப்பட்டே ஆக வேண்டும் என்றும் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் பொருட்படுத்தப்பட வேண்டியதொன்றல்ல, அதே நேரம் கடந்த காலங்களில் செய்தது போன்று கொத்தனி அமைப்பதன் மூலம், அவர்கள் வாக்களிக்கலாம் என்று அக்கட்சியின் செயலாளர் நாயகம் வலியுறுத்தியிருப்பது எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதொன்றல்ல. 

இவர்களது இந்த கூற்று வடபுலத்து முஸ்லிம்களின் பிரச்சினைகள் என்னவென்றே இவர்கள் தெரியாமல் இருக்கின்றார்களா? அல்லது தெரிந்து கொண்டோ வழமைப் போன்று அடுத்தவர்களின் நிகழ்ச்சி நிரலை செயற்படுத்துவதற்காக இவ்வாறு பேசுகின்றார்களா? என்ற வினாவை தொடுக்க வைக்கின்றது. ஏனெனில் 1990 ஆம் ஆண்டு வடபுலத்திலிருந்து வெளயேற்றப்பட்டு புத்தளம், அநுராதபுரம் மற்றும் இதர மாவட்டங்களில் வாழ்ந்த போதும், இவ்வாறு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் பெயர்கள் வடமாகாணத்தில் தாங்கள் சார்ந்த பிரதேசங்களுக்கான வாக்காளர் பட்டியலிலேயே இருந்தன. 

எனவே வடமாகாணத்தில் நடைபெற்ற எந்த ஒரு தேர்திலும், அவர்கள் வாக்களிப்பதற்கு எதுவித தடையுமிருக்கவில்லை. ஆனாலும் விடுதலைப்புலிகளின் காலத்தில் வட புலத்துக்கு சென்று இம் மக்களினால் வாக்களிக்க முடியாத நிலை இருந்ததினால் தாங்கள் அகதிகளாக வாழ்ந்த இடங்களிலேயே கொத்தணி அமைத்து வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டிருந்தது. 

ஆனால் இன்று யுத்தம் முடிவுற்று அமைதி திரும்பி இருக்கும் நிலையில், வடமாகாணத்தில் வாழுகின்றவர்களுக்கு மாத்திரம் தான், வடமாகாணத்தில் நடைபெறுகின்ற தேர்தல்களில் வாக்களிக்க முடியும், வடமாகாணத்தை சேர்ந்தவர்களாயினும், வேறு மாவட்டங்களில் அகதி முகாம்களில் வாழ்ந்தால் கூட, கடந்த காலங்களில் வழங்கப்பட்டது போன்ற வாக்களிக்கின்ற உரிமை சட்டப்படி வழங்க முடியாது என்று தேர்தல் ஆணையகம் தெரிவித்திருக்கின்றது. 

இதன் காரணமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களில் வடமாகாணத்தில் மீள்குடியயேறாத முஸ்லிம்களின் பெயர்கள் 2010 ஆம் ஆண்டு வரை,வடமாகாணத்துக்கான வாக்காளர் பட்டியலில் இருந்த போதும்,தற்போது நீக்கப்பட்டுள்ளதாக அறிகின்றோம்.இது சட்ட ரீதியாக அவர்களினால் எடுத்திருக்கின்ற முடிவாகும்.மறு வார்த்தையில் சொல்லப் போனால்,வடமாகாணத்தில் மீள்குடியேறியவர்களுக்கு மாத்திரம் தான் வாக்குரிமை இருக்கின்றது. 

இதனது பின்னணியில் தான் மீள்குடியேற்றம் முடிவுறாத வரையில் வடமாகாண சபை தேர்தல் நடத்தப்படக் கூடாது என்ற நிலைப்பாட்டை எடுத்தோம்.உதாரணமாக மன்னார் மாவட்டத்தில் 1990 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் எருக்கலம்பிட்டியில் 8 ஆயிரம் வாக்களார்கள் பதிவுகளில் இருந்தனர். ஆனால் தற்போது புதிதாக காணப்படும் வாக்குப்பட்டியலில் 2 ஆயிரம் மட்டுமே உள்ளடக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த தொகை 80 சதவீதமாக குறைவடைந்துள்ளதை பார்க்க முடிகின்றது. 

முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தாமதப்படுத்தப்படுவதற்கு பின்வருவன காரணிகளாக அமைகின்றன. முதலில் மீள்குடியேற்றத்திற்கு தேவையான அடிப்படை வசதி இன்மையை முதன்மைப்படுத்தி கூற முடியும். அத்தோடு முஸ்லிம்கள் தற்போது எதிர் கொள்ளும் காணிப் பிரச்சினையை நான்கு வகையில் பிரிக்கலாம். 

1-முஸ்லிம்கள் பூர்வீகமாக வாழந்த இடங்கள் தமிழர்களினால் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் அபகரிக்கப்பட்டு இன்று வரை அவர்களின் கைகளில் இருக்கின்றமை. 

2-முஸ்லிம்களுடைய காணிகள் பாதுகாப்பு காரணத்திற்காக சுவீகரிக்கப்பட்டமை. 

3-முஸ்லிம்கள் வாழ்ந்த சில கிராமங்கள் நீண்டகாலமாக யாரும் வாழததினால் அவை காடுகளாக மாறிய நிலையில் வனபரிபாலன திணைக்களம்,வர்த்தமாணி மூலம் அதனை சுவீகரித்திருப்பது. 

4-கடந்த 22 வருடங்களாக வெளியேற்றப்பட்ட நிலையில் வாழ்வதால்,இயற்கையான குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அதிகரிப்பின் காரணமாக புதிய காணிகள் தேவைப்படுகின்றமை. 

குறிப்பாக தமிழ் மக்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட காணிகளை மீண்டும் தங்களுக்கு தர வேண்டும் என்று கேட்பதற்கு நியாயமிருந்தும் அரு சமூகத்தின் ஒற்றுமையினை கருதி இவ்வாறு கோராது மாற்ற்று இடங்களையே இம் முஸ்லிமகள் கோரி நிற்கின்றனர் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். 

இந்த நிலையில் சொந்த வீடுகளில்,சொந்த தொழில்களை செய்து கொண்டு வசதியாக வாழ்ந்த மக்கள் அகதி முத்திரை குத்தி வெளியேற்றப்பட்டு 22 வருட அவல வாழ்க்கை வாழ்ந்து, அமைதி திரும்பியதன் பின்பு கூட தாங்கள் வாழ்ந்த வீடுகளில் அல்லது நிலங்களில் வாழ முடியாத துரப்பாக்கிய நிலையில் இருக்கின்ற இம் முஸ்லிம்களுக்கு எஞ்சியிருப்பது, அரசாங்கத்தால் வழங்கப்பட்ட காடுகள் மாத்திரமே. 

பல நுற்றாண்டு முன்பு மனிதன் காடுகளில் வாழ்ந்த வரலாறுகளை படித்திருக்கின்றோம்.ஆனால் நகரங்களில் வாழ்ந்தவர்கள் மீண்டும் காடுகளில் வாழ வேண்டிய நிலை வடபுலத்து முஸ்லிம்களுக்கு தான் ஏற்பட்டுள்ளது. 

இறைவனின் நாட்டமென்று அதனையும், பொருந்திக் கொண்டு காடுகளை துப்பரவு செய்து வாழலாம் என்று இம் மக்கள் செல்கின்ற போது, அதனை இவர்களின் வெளியுற்றத்திற்கு காரணமாக இருந்தவர்கள் அல்லது காரணமாக இருந்தவர்களை பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் இம்மக்களின் மீள்குடியுற்றத்தை தடைசெய்வதற்கு முயலுவது மாத்திரமல்லாது, அம்மக்களின் பிரதிநிதி என்பதன் ஒரே காரணத்திற்காக அல்லது தன்னந்தனியாக நின்று இம்மக்களுக்கு மீள் வாழ்வளிக்க முயலுகின்றார்கள் என்ற ஒரே காரணத்துக்காக அமைச்சர் றிசாத் பதியுதீன் இவர்களால் இங்கு இலக்கு வைக்கப்படுகின்றார். இவர் மீது தினந்தினம் பொய்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன. இவர்களின நோக்கம் இரு வகைப்படும். 

1-வட புலத்த்து முஸ்லிம்களி பிரசண்ணத்தை இல்லாமல் செய்வது அல்லது குறைப்பது 

2-நடக்க இருக்கின்ற மாகாண சபை தேர்தலில் முஸ்லிம்களின் பிரதி நிதித்துவத்தை குறைப்பது அல்லது இல்லாமல் செய்வது 

இந்த நிலையில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றோம் என்று கூறுகின்ற கட்சிகள் எடுக்க வேண்டிய நிலைப்பாடு என்ன? முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்பட்டால் என்ன படாவிட்டால் என்ன அவர்களுக்கு மாகாண சபையில் பிரதிநிதித்துவம் கிடைத்தாலென்ன, கிடைக்காவிட்டாலென்ன? யாரையோ திருப்திபடுத்துவதற்காக மாகாண சபை தேர்தல் நடத்த வேண்டும். 

அதற்கு ´ஜனநாயகம்´ என்ற பசப்பு வார்த்தை முக்காட்டாய் அமைய வேண்டும் என்பதா? அல்லது தேர்தல் நடத்துவதால் எங்களுக்கு ஆட்சேபனையில்லை, ஆனால் முஸ்லிம்களையும் மீள்குடியேற்றம் செய்து அதன் மூலம் அவர்கள் வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்தி அவர்கள் தங்களது பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்துவதற்கான எற்பாட்டை முதலில் செய்யுங்கள், அதன் பின் தேர்தலை நடத்துங்கள் என்பதா? என்று கேட்கவிரும்புகின்றோம். 

தாங்கள் தான் முஸ்லிம்களின் பிரதான கட்சி என்பதால் தங்களது ஒரு பிரதிநிதித்துவத்தை வழங்கியிருந்த போதும் கூட, வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை திரும்பி பார்க்காதவர்கள், இன்று முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை பற்றியும் கவலையில்லை, மாகாண சபையில் முஸ்லிம் பிரதி நிதித்துவத்தை மாகாண சபையில் பெற்றுக் கொள்ளவதிலும் பிரச்சினையில்லை. 

ஆனால் தேர்தலை நடத்துங்கள் என்று தமது உயர் பீடத்தில் தீர்மானம் எடுப்பார்ளானால் யாருடைய நிகழ்ச்சி நிரலுக்காக இந்த தீர்மானத்தை எடுக்கின்றார்கள் என்ற கேள்வியும் எழுக்கின்றது? வட மாகாண சபை தேர்தல் நடத்தப்பட்டு மாகாண ஆட்சி நடைபெறுகின்ற போது, முஸ்லிம்களுக்காக பேசுவதற்கு முஸ்லிம் பிரதிநிதித்துவம் இங்கு இருக்க கூடாது என்பது இவர்களது திட்டமாகும். 

எனவே பொருந்தாத தர்க்கங்களை முன் வைத்து அதற்கு தாமகவே பதிலையும் தயாரித்து வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் அவர்களது வாழ்வியல், வாக்குரிமைகளை பெற்றுக் கொடுக்க எதையும் செய்யாதவர்கள், தாங்கள் வெறும் அறிக்கைகளை மட்டும் வெளியிட்டு முஸ்லிம்களின் ஒட்டு மொத்த பாதுகாவலன் என்று பறைசாற்றுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &