முஸ்லிம்களுக்கு எந்த வொரு பிரச்சினையும் ஏற்படுவதை நாம் அனுமதிக்க மாட்டோம். முஸ்லிம்களின் பாதுகாப்பு விடயத்தில் முழுமையாக கவனமெடுத்து செயல்பட்டுள்ளோம் என பாதுகாப்பு செயலாளர் கோத்தாபே ராஜபக்ச தெரிவித்துள்ளார்.கிழக்கு மாகாணத்திலுள்ள ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிரதிநிதிகள் முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்கள், பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதி நிதிகளை (11.4.2013) வியாழக்கிழமை பாதுகாப்பு அமைச்சில் சந்தித்த போதே கோத்தாபய ராஜபக்ச இவ்வாறு கூறியுள்ளார். இந்த அவசர சந்திப்புக்காக கிழக்கு மாகாண முஸ்லிம் முக்கியஸ்தர்கள் கொழும்புக்கு சிறப்பு விமானம் மூலம் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
கோத்தாபய ராஜபக்ச இந்த சந்திப்பில் தொடர்ந்து கூறியுள்ளதாவது,
அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையுடன் பேசி ஹலால் தொடர்பான பிரச்சினைகள் சுமூக தீர்வுக்கு கொண்டு வந்துள்ளோம். முஸ்லிம்களுக்கெதிராக சிலரினால் மேற் கொள்ளப்படவிருந்த பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தியிருக்கின்றோம்.
ஜனாதிபதியும், நானும் முஸ்லிம்களுக்கெதிராக செயற்படுவதாக சிலர் பொய் பிரச்சாரம் செய்கின்றனர். ஒரு போதும் முஸ்லிம்களுக்கெதிராக நாம் செயற்படவில்லை எந்த ஒரு அநீதியும் முஸ்லிம்களுக்கெதிராகவோ அல்லது வேறு எந்தவொரு சமூகத்திற்கெதிராகவோ இடம் பெறுவதை நாம் அனுமதிக்க மாட்டோம்.
ஜனாதிபதி சிறுவயது முதலே முஸ்லிம்களுடன் நெருக்கமாக பழகியதுடன் முஸ்லிம் நண்பர்களுடன் அதிகளவு உறவை வைத்துள்ளவர். ஜனாதிபதி பலஸ்த்தீனத்துடன் நெருக்கமான நட்புறவு வைத்துள்ளவர் ஜனாதிபதிக்கும் பலஸ்தீனத்துக்கும் ஆரம்பம் தொட்டே இன்று வரை ஒரு உறவும் பிணைப்பும் உள்ளது.
கிழக்குக்கு வெளியே சில பிரதேசங்களில் சிறிய சில சம்பவங்கள் இடம் பெற்றன. அவற்றை நாங்கள் உடனுக்குடன் தடுத்து நிறுத்தியுள்ளோம்.
அதே போன்று எங்களுக்கு ஜெனீவாவில் முஸ்லிம் நாடுகள் செய்த உதவியை நாங்கள் என்றும் மறக்க முடியாது. பாகிஸ்த்தான் நாங்கள் கேட்கும் போதெல்லாம் உதவியது. எங்களுக்கு எப்போதும் பாகிஸ்த்தான் உதவ தயாராக உள்ளது.
முஸ்லிம்களுக்கு எந்த வொரு பிரச்சினையும் ஏற்படுவதை நாம் அனுமதிக்க மாட்டோம். முஸ்லிம்களின் பாதுகாப்பு விடயத்தில் முழுமையாக கவனமெடுத்து செயல்பட்டுள்ளோம் எனவும் இதன்போது கோத்தபய ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.