இலங்கை முஸ்லிம்களுக்கு ஹலால் அங்கீகாரம் தேவை. பெப்பிலியான வர்த்தக நிறுவனம் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு தகுதி தராதரம் பாராது தண்டனை வழங்குவதற்கும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாக முஸ்லிம் அமைச்சர்களின் சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்களுக்கு எதிராக இன்று நாட்டில் நடைபெற்றுவரும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஆராயும் முஸ்லிம் அமைச்சர்களின் சந்திப்பு நேற்றிரவு நடைபெற்றது. இச்சந்திப்பிலேயே இத்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அமைச்சர் பெளஸியின் வீட்டில் நடைபெற்ற இச்சந்திப்பில் அமைச்சர்களான பெளஸி, ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியூதீன், அதாவுல்லா ஆகியோர் கலந்துகொண்டனர்.
முஸ்லிம்களுக்கு ஹலால் அங்கீகாரம் தேவை. இதுவரை காலமும் இலங்கை முஸ்லிம்களின் ஹலால் விடயத்தை கருத்திற் கொண்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை ஹலால் சான்றிதழ் வழங்கியதில் தவறில்லை.
எனினும் இன்று இவ்விடயத்தை பூதாகாரப்படுத்தியுள்ளனர். ஆகவே ஏற்றுக்கொள்ளக்கூடிய பொறிமுறையொன்று தேவை.
அத்துடன் கடந்த வியாழக்கிழமை இரவு பெப்பிலியானவில் அ மைந்துள்ள முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான ஆடை நிறுவன களஞ்சியசாலை மீதான தாக்குதலை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
எனவே அத்தாக்குதல் விடயத்தில் தகுந்த விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு தகுதி தராதரம் பாராது தண்டனை வழங்க வேண்டும். இவ்விடயங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாக இச்சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டது.
Apr 1, 2013
ஹலால் அங்கீகாரம் தேவை : முஸ்லிம் அமைச்சர்கள் தீர்மானம்
Posted by AliffAlerts on 02:11 in NL | Comments : 0
