BREAKING NEWS

Mar 24, 2013

முஸ்லிம்ளிடம் ஒரு அன்பான வேண்டு கோள்: அஸாத், அமில தேரர்

முஸ்லிம் சகோதரர்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள்: அஸாத், அமில தேரர் கோரிக்கை  

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பிரச்சினைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முஸ்லிம்கள் தமது வர்த்தக நிலையங்களை யும் ஏனைய அலுவலகங்களையும் மூடி பாரிய எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடிப்படைவாதத்துக்கு ஊக்கமளிக்கும் ஒரு செயலாகவும், ஏற்கனவே எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் ஒரு முயற்சியாகவுமே நாம் காணுகின்றோம்’ என்று தம்பர அமில தேரர், பத்தேகம சமித தேரர் மற்றும் தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் எம்.அஸாத் சாலி ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவர்கள் விடுத்துள்ள கூட்டறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

‘முஸ்லிம் சகோதரர்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள் 30 வருட கால கொடூரமான இனவாத யுத்தத்தின் பின் அமைதியான முறையில் அபிவிருத்தியை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கும் எமது உன்னதமான தாய் திருநாட்டில் மதவாதத்தை தூண்டி அந்த அமைதிக்குப் பங்கம் விளைவிக்க ஏகாதிபத்தியவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள பொது பல சேனா மற்றும் ஜாதிக ஹெல உறுமய போன்ற அமைப்புக்கள் எடுத்து வருகின்ற முயற்சிகள் எம் அனைவரையும் கவலை அடையச் செய்துள்ளன.

பொது பல சேனா ஜாதிக ஹெல உறுமயவின் போக்குகளும் கருத்துக்களும் நாடளாவிய ரீதியில் சிங்கள மக்களின் கருத்துக்கள் அல்ல என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம். பௌத்த மதத்தின் மூன்று பீடங்களையும் சேர்ந்த மகாநாயக்க தேரர்கள் தற்போது இவர்கள் விடயத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.

இவர்கள் குறித்த விடயங்களில் சில தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க மகாநாயக்க தேரர்கள் உறுதி பூண்டுள்ளனர். இது எம் அனைவருக்கும் நிம்மதியளிக்கும் ஒரு தகவலாகும். விரைவில் இது தொடர்பான விஷேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இவ்வாறான ஒரு சூழலில் நாளை 26ஆம் திகதி திங்கட்கிழமை நாட்டில் உள்ள முஸ்லிம்கள் தமது வர்த்தக நிலையங்களையும் ஏனைய அலுவலகங்களையும் மூடி பாரிய எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடிப்படைவாதத்துக்கு ஊக்கமளிக்கும் ஒரு செயலாகவும், ஏற்கனவே எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் ஒரு முயற்சியாகவுமே நாம் காணுகின்றோம்.

முஸ்லிம் சகோதரர்களை சீண்டி விடுவதற்கு ஏகாதிபத்தியவாதிகளின் டொலர்களை செலவிட்டு எடுக்கப்பட்ட எல்லா முயற்சிகளும் இதுவரை தோல்வியிலேயே முடிந்துள்ளன. அவர்கள் இந்த விடயத்தில் மிகவும் பொறுமை காத்து உச்ச கட்ட சகிப்புத்தன்மையுடன், இறைவனிடம் கையேந்தி அமைதியாக இருந்து வந்துள்ளனர்.

இதுவே தீய சக்திகளுக்குக் கிடைத்துள்ள மாபெரும் தோல்வியாகும். இவ்வளவு காலம் காத்து வந்த பொறுமை, சகிப்புத்தன்மை என்பனவற்றுக்கு சவால் விடுக்கும் வகையில் நாளைய எதிர்ப்பு நடவடிக்கைகள் அமைந்து விடக்கூடாது.

இனவாதத்துக்கு இனவாதத்தால் பதில் சொல்ல முடியாது. பொறுமை, சகிப்புத்தன்மை, சகோதரத்துவம் என்பனவற்றின் மூலமே நாம் அவற்றை வெற்றி கொள்ளலாம். பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான சிங்கள முஸ்லிம் சகோதரத்துவத்துக்கு சவால் விடுக்கும் சக்திகள் வெட்கித் தலைகுனியும் வகையில் எமது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். எமது செயற்பாடுகள் மூலம் இன நல்லுறவுகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் எதிர்வரும்

சிங்கள தமிழ் புத்தாண்டை சகல இனங்களும் ஒன்று சேர்ந்து உண்மையான சகோதரத்துவ புத்தாண்டாகக் கொண்டாட வழியமைப்போம். அதற்கேற்ப விவேகமான முறையில் நாம் நடந்து கொள்ள வேண்டும் என முஸ்லிம் சகோதரர்களை மிகவும் அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.

ஒப்பம்:

1. சங்கைக்குரிய தமல அமில தேரர்: சிரேஷ்ட விரிவுரையாளர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்.

2. சங்கைக்குரிய பத்தேகம சமித தேரர்: தென் மாகாண சபை உறுப்பினர்

3. எம். அஸாத் சாலி :பொது செயலாளர் தேசிய ஐக்கிய முன்னணி

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &