ஹலால் என்பது மதத்துடன் சம்பந்தப்பட்டது. காலா காலமாக அது நடைமுறையில் உள்ளது.அதனை மதிக்க வேண்டியது எமது கடமை. ஹலாலை முஸ்லிம்கள் எவர்மீதும் திணிக்கவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் நிலவும் ஹலால் பிரச்சினை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஹலால் விடயத்தில் ஏற்பட்டிருக்கும் சர்ச்சைகள் தொடர்பில் நாம் கடும் அதிருப்தி அடைகிறோம். இது விடயத்தில் அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கையினை மேற்கொள்ளவேண்டும்.
ஒரு மதத்தினுடைய உரிமையில் எவரும் தலையிட முடியாது.அவர்களது உரிமைகள் தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் அவர்களிடமே இருக்க வேண்டும். தமது விருப்பு வெறுப்புக்களுக்கு அமைய தீர்மானங்களை மேற்கொள்ளவேண்டும் என யாருக்கும் வற்புறுத்த முடியாது. அது அடிப்படை உரிமை மீறலாகும்.
ஹலால் என்பது மதத்துடன் சம்பந்தப்பட்டது. காலா காலமாக அது நடைமுறையில் உள்ளது.அதனை மதிக்க வேண்டியது எமது கடமை. ஹலாலை முஸ்லிம்கள் எவர்மீதும் திணிக்கவில்லை.
ஹலால் என்பது முஸ்லிம்களை வழிநடத்தும் தனிப்பட்ட உரிமையைக் கொண்டது. குறித்த விடயத்தில் தேவையற்ற ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பிரசாரங்களை மேற்கொண்டு தேவையற்ற நிலைமைகளை உருவாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.