Aug 18, 2012
15 வயதான சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் காதலன் விளக்கமறியலில்
Posted by AliffAlerts on 00:01 in NL | Comments : 0
15 வயது சிறுமியான தனது காதலியை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 19 வயது நபரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்படி சிறுமியை அவரின் சட்டபூர்வ பாதுகாவலர்களிடமிருந்து சிறுமியின் காதலனென கூறப்படும் இளைஞன் கடத்திச் சென்று குற்றம்புரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோட்டை ரயில் நிலையப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிகொண்டிருந்த மேற்படி இருவரையும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொலிஸார் விசாரித்தனர்.
இவ்விருவரும் கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது இருவரும் காதலர்கள் என்பது தெரியவந்தததுடன் மேற்படி இளைஞனின் வசிப்பிடமான அநுராதபுரத்திற்கு சிறுமி அழைத்துச்செல்லப்பட்டு பாலியல் குற்றம் புரியப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பாணந்துறையை வசிப்பிடமாக கொண்ட சிறுமியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளாள்.
மேற்படி இளைஞனை கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது சந்தேகநபரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.