BREAKING NEWS

Aug 27, 2012

அப்பிள் நிறுவனத்திற்கு 105 கோடி டொலர் நஷ்ட ஈடு வழங்க சம்ஸுங் நிறுவனத்திற்கு உத்தரவு

தென்கொரியாவின் சம்ஸுங் இலத்திரனியல் நிறுவனமானது அமெரிக்காவின் அப்பிள் இலத்திரனியல் நிறுவனத்திற்கு சுமார் 105 கோடி டொலர் நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென அமெரிக்க நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது.

தனது ஐபோன் மற்றும் ஐபாட் தயாரிப்பு நுட்பங்களை பயன்படுத்து சம்ஸுக் நிறுவனம் இலத்திரனியல் பொருட்களை தயாரித்ததாக குற்றம் சுமத்தி கலிபோர்னியா மாநிலத்தலுள்ள நீதிமன்றமொன்றில் அப்பிள் நிறுவனம் காப்புரிமை மீறல் வழக்குத் தொடுத்திருந்தது. இந்த வழக்கிலேயே சம்ஸுங் நிறுவனம் 1.045 பில்லியன் டொலர்களை (சுமார் 13,856 கோடி இலங்கை ரூபா)  வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த பல தசாப்தங்களில் காப்புரிமை மீறல் வழக்குகளில் விதிக்கப்பட்ட மிகப்பெரிய நஷ்ட ஈடுகளில் இதுவும் ஒன்றாகும்.
இத்தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாக சம்ஸுங் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் இத்தீர்ப்பினால் சம்ஸுங் நிறுவனத்தின் கேள்விக்குரிய இலத்திரனியல் பொருட்களின் விற்பனை நிறுத்தப்படுமா என்பது உடனடியாக தெரியவில்லை.

கடந்த ஏப்ரல் ஜூன் மாதங்களில் சம்ஸுங் நிறுவனம் 50.2 மில்லியன் ஸ்மார்ட் போன்களை விநியோகித்திருந்தாகவும் இதே காலப்பகுதியில் அப்பிள் நிறுவனம் 26 மில்லியன் ஐபோன்களை விநியோகித்திருந்ததாகவும் ஐ.டி.சி. எனும் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்தது.

அமெரிக்காவில் மேற்படி தீர்ப்பு அளிக்கப்பட்ட அதே தினத்தில் இரு நிறுவனங்களும் பரஸ்பரம் காப்புரிமைகளை மீறியுள்ளதாக தென்கொரிய நீதிமன்றமொன்று தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் அப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 4 மற்றும் ஐபாட் 2 தயாரிப்புகளையும் சம்ஸுங் நிறுவனத்தின் கலெக்ஸி எஸ் மற்றும் கலெக்ஸி எஸ் II ரக தயாரிப்புகளையும் தென்கொரியாவில் விற்பனை செய்வதற்கு தென்கொரிய நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக ஏ.எவ்.பி. தெரிவித்துள்ளது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &