ஜேர்மனியில் ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 35 பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். ஆஸ்திரியாவின் கிராஸ் நகரில் இருந்து பிரான்ஸ் எல்லைக்கு அருகில் உள்ள சார்புரூகேன் என்ற ஜேர்மானிய நகரத்திற்கு பயணிகள் ரயில் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது.
இதில் 250 பயணிகள் இருந்தனர். இதேபோல் ஹங்கேரி நோக்கி சரக்கு ரெயில் ஒன்று சென்றது. தெற்கு ஜேர்மனியில் உள்ள மன்ஹெய்ம் ரயில் நிலையம் அருகே 2 ரயில்களும் வந்தபோது எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக்கொண்டன.
இதில் பயணிகள் ரயிலின் 5 பெட்டிகள் தடம்புரண்டன. தகவல் அறிந்ததும் மீட்புக்குழுவினர் விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த விபத்தில் 35 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் 4 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது.
மீட்புப்பணிகள் நிறைவடைந்து விட்டபோதிலும், மன்ஹெய்ம் ரயில்நிலையம் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.