சட்டத்தரணி மைத்திரி குணரட்னவை அவமதித்தமை தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரரை கொழும்பு கோட்டை நீதவான் இன்று எச்சரித்துள்ளார்.
வழக்கு விசாரணைக்கு பின்னர், வழக்கில் ஆஜராகியமைக்கான மைத்திரி குணரட்னவை ஞானசாரர் நாய் என்ற அவமதித்துள்ளார். இதனையடுத்து குணரட்ன சம்பவம் குறித்து கொம்பனித் தெரு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, கோட்டை நீதவான் திலின கமகே, ஞானசாரரை எச்சரித்ததுடன், சட்டத்தரணிகள் நீதிமன்ற சேவைகளை செய்வதாகவும் அவர்களின் கடமைகள் குறித்து குற்றம் சுமத்தக் கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை ஞானசாரர், குர் ஆனை அவமதித்தார என்பதை அறிய அவரது உரை அடங்கிய ஒளி நாடா முஸ்லிம் மத விவகார பணிப்பாளர் நாயகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்..
எவ்வாறாயினும் அவற்றை பொருட்படுத்தாத ஞானசாரர், இன்று வழக்கு விசாரணை முடிந்து நீதிமன்றத்தில் இருந்து வெளியேறிய போது, விளைவுகள் பற்றி கவலையில்லை எனவும் குர் ஆனுக்கு எதிரான போராட்டம் தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நீதி மன்றத்திலிருந்து என்ன தீர்ப்பு வழங்கப்பட்டாலும் எமது செயற்பாட்டை நாம் தொடர்ந்தும் முன்னெடுப்போம். எம்மை இவ்வாறு கட்டுப்படுத்த வந்தால், இந்த நாட்டிலுள்ள அனைத்து வீடுகளும் சிறைச்சாலைகளாக மாறும். சகல மரங்களும் தூக்கு மேடைகளாக மாறும் என பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரர் தெரிவித்துள்ளார்.