BBC: இலங்கையில் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டிய, வெறுப்புணர்வுகளைத் தூண்டும் பேச்சுக்கள் பற்றி அமெரிக்கா கவலை தெரிவித்திருக்கிறது.தென்னிலங்கையில் அளுத்கமவிலும்,
அதன் அருகிலுள்ள பகுதிகளிலும், சமீபத்தில் நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறையில் நால்வர் கொல்லப்பட்டனர்.மேலும் 80 பேர் காயமடைந்தனர். பல முஸ்லீம்களின் வீடுகள் நாசமாக்கப்பட்டன, பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
இதனையடுத்து, அமெரிக்க வெளியுறவுத்துறைக்காகப் பேசவல்ல ஜென் ப்சாக்கி, கருத்து வெளியிடுகையில், இலங்கையில் மதச் சிறுபான்மையர்களைப் பாதுகாக்க இலங்கைக்கு இருக்கும் கடப்பாடுகளை அது நிறைவேற்றவேண்டும் என்று குறிப்பிட்டார்.
மேலும், இலங்கையில் நடந்த வன்செயல்கள் குறித்து முழு விசாரணை தேவை என்றும் அவர் கூறினார்.
அளுத்கமவில் அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் பௌத்தர்கள் அந்த நகர் மீது அமல்படுத்தியிருக்கும் முற்றுகை காரணமாக, அங்கிருக்கும் முஸ்லீம் மக்களிடம் இருக்கும் உணவுப் பொருட்கள் குறைந்துவருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
பௌத்த தீவிரவாத அமைப்பான, பொது பல சேன ஞாயிறன்று நடத்திய முஸ்லீம்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை அடுத்தே இந்த வன்முறை வெடித்தது.