MN:
மன்னார் மாவட்ட மறிச்சிக்கட்டி மக்களை அந்த மண்ணிலேயே வாழவிடுங்கள், இவ்விடத்தில் அரசு மௌனம் சாதிக்காது இம்மக்களுக்குரிய தீர்வினை உடன் பெற்றுக்கொடுக்க வேண்டும் என கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளரும் அகில
இலங்கை மக்கள் காங்கிரஸின் கொள்கை பரப்புச் செயலாளருமான எம்.எஸ்.சுபைர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொதுபல சேனாவினால் சர்ச்சைக்குள்ளாக்கப் பட்டுள்ள மறிச்சிக்கட்டி பிரதேச மக்களை கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைர் நேற்று முந்தினம் சந்தித்து அம்மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி கேட்டறிந்து கொண்டதன் போதே இவ்வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இச்சந்திப்பின் போது, மறிச்சிக்கட்டி மக்கள் இப்பிரதேசத்தில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருதாகவும், இவர்களின் பூர்வீக அடையாளங்களான மையவாடி, வணக்கஸ்தலங்கள் மற்றும் இன்னோறன்ன அடையாளங்கள் என்பன இங்குள்ளதாக தெரிவித்தனர்.
கடந்த கால பயங்கரவாத அச்சத்தினால் இப்பிரதேசத்தை விட்டு வெளியேற வேண்டிய துர்ப்பாக்கிய நிலையேற்பட்டதாகவும் இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதான சூழலை அடுத்து இப்பிரதேசத்தில் மீள்குடியேறிதாகவும், இப்பிரதேசத்தில் குடிநீர் வசதிகளும் இல்லாமல் வாழ்ந்து வருவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இவ்வாறான நிலையில் பொதுபல சேனா எங்கள் மண்ணில் நாங்கள் மீள்குடியேறியதை தடுக்கின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதுடன் இம்மண்ணில் முஸ்லிம்கள் வாழ்ந்த எந்தத் தடயமும் இல்லை எனவும் இப்பிரதேசம் வில்பத்து காட்டிற்குரியது எனவும் பொய்யான பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளதானது மனதேனையை அளிக்கின்றது என மறிச்சிக்கட்டி மக்கள் தவிசாளரிடம் கவலை தெரிவித்தனர்.
இதனையடுத்து தவிசாளர் சுபைர் எமது கட்சித் தலைமை அமைச்சர் றிசாத் பதியுதீன் மறிச்சிக்கட்டி மக்கள் இம்மண்ணிலேயே வாழவேண்டும் என்பதற்காக குரல் கொடுத்து வருவதுடன், இம்மண்ணில் வாழ்வதற்குரிய சகல அடிப்படை வசதிகளையும் செய்து தருவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருதாகவும் தெரிவித்தார்.
இச்சந்திப்பின் போது வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீனும் பிரசன்னமாயிருந்தார்.