BREAKING NEWS

Mar 11, 2014

பங்களாதேஷி ற்கு கால் நடைகளை ஏற்றுமதி செய்ய பேச்சு

Vidiyal.lk
இலங்கையிலிருந்து பங்களாதேஷிற்கு கால்நடைகளை ஏற்றுமதி செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன என மத்திய மாகாண மிருக வளர்ப்பு கால்நடை அபிவிருத்தி பணிப்பாளர் கலாநிதி குலேஸ்வரக் குமார் தெரிவித்தார்.
காலத்திற்கு காலம் வளம் குன்றிய கால்நடைகளை விவசாய மிருக வளர்ப்பு வட்டத்திலிருந்து நீக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
அவ்வாறில்லாவிட்டால் எதிர்காலத்தில் மிருக வளர்ப்பு கால் நடை அபிவிருத்தி அமைச்சை இல்லாதொழிக்க வேண்டிவரும் எனவும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் பல்வேறு இடங்களில் கால்நடைகளை தாக்கியுள்ள கால்வாய் நோய் எனப்படும் தொற்று நோய் மத்திய மாகாணத்தை தாக்காதாவாறு முழுமையாக கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாக மாகாண பணிப்பாளர் குறிப்பிட்டார்.
பேராதனை, கெட்டம்பேயில் உள்ள மத்திய மாகாண மிருக வளர்ப்பு கால்நடை அபிவிருத்தி பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்விலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
"விபத்துக்கள் காரணமாக கால்கள் உடைந்த மாடுகள், போதியளவு பால் தர முடியாத பசுக்கள், அளவுக்கு அதிகமான ஆண் மாடுகள், கருவளம் குன்றிய கால்நடைகள், வயதுபோன கால்நடைகள் என்பவற்றை மிருக வளர்ப்பு களத்தில் இருந்து அகற்ற வேண்டும். சாதாரணமாக ஒரு மாடு 20 வருடங்கள் வாழக்கூடியது.
இரண்டாம் வருடம் முதல் கன்று ஈனும். ஏதேனும் காரணத்தால் கன்று போடுவது தவிர்க்கப்படின் 17 அல்லது 18 வருடங்கள் உணவு வழங்கி வளர்க்க வேண்டும்.
அல்லாவிடின் கட்டாக்காலியாக வெளியே விட வேண்டும். அப்படி கட்டாக்காலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது விவசாய நிலங்கள் கண்டபடி அழிக்கப்படும்.
இது மற்றுமொரு பிரச்சினையாகி விடும். அப்படி காலத்திற்குக் காலம் அகற்றாவிட்டால் அதனை வளர்க்கின்ற விவசாயி மேலதிக சுமைகளை தாங்கவேண்டும்.
அப்படி ஒரு விவசாயி காலமெல்லாம் அதனைத் தாங்கிக் கொண்டிருக்க முடியாது. அப்படி வளம் குன்றிய கால் நடைகளை அகற்றுவதற்கு இரண்டு வழிகள் உண்டு. ஒன்று கசாப்புக் கடை அல்லது அவற்றை இறைச்சிக்காக வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் விவசாயிகள்
மேலதிக சுமையைத் தாங்க வேண்டும்.
தற்போது பங்காளதேஷிற்கு கால் நடைகளை ஏற்றுமதி செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன. அத்துடன் செயற்கை கருவூட்டல் மூலம் காலத்திற்கு காலம் பசுக்கள் கர்ப்பமடையச் செய்யப்படுகின்றன.இது தேவையறற்ற ஒன்றாகி விடும். அப்போது இத்துறையில் ஈடுபட்டுள்ள தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் செயல் இழக்க வேண்டி வரும்.
அத்துடன் மிருக வளர்ப்பு துறை தொடர்பான மிருக வைத்தியர்களுக்கும் தொழில் வாய்ப்புக் குன்றும். இயற்கையில் நடைபெறும் இந்த செயன்முறையை கட்டுப்படுத்துவதனால் சூழல் சமநிலை இழக்கப்பட்டு வேறு விளைவுகளை எதிர்கொள்ளவேண்டி ஏற்படும். அது மட்டுமல்லாது இறைச்சி என்பது ஒரு சாராருக்கான உணவு அல்ல. சில குறிப்பிட்ட நோய்களுக்கும் புரதப் பற்றாக்குறைக்கும் அது பயன்படுத்தப்படும்.
சில விளையாட்டு வீரர்களுக்கும் படை வீரர்களுக்கும் அவ்வப்போது மாமிசம் வழங்கப்பட வேண்டும். மாடுகள் அறுக்கப்படுவது குறைக்கப் படின் அல்லது இறைச்சிக்காக வெட்டப்படுவது நிறுத்தப்படின் மேற்குறிப்பிட்ட தேவைகளுக்காக அவற்றை இறக்குமதி செய்ய வேண்டிவரும்.
இறக்குமதி என்பது பாரிய வெளிநாட்டுச் செலாவணியை இழக் நேரிடுவதுடன் புத்தம் புதிய இறைச்சியையும் பெற்றுக் கொள்ள முடியாது போகும். இவை அனைத்தையும் விட கால்நடை வளர்ப்போருக்கு ஏற்படும் மேலதிக சுமை காரணமாக அவர்கள் அதனை கைவிடுவர். இதனால் மாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள பலரது பொருளாதாரமும் பாதிப்படையும்" என்றார்.
-ஜே.எம்.ஹாபீஸ்-

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &