இலங்கையில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப் பெண்களாகச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருப்பதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.
2012 ஆம் ஆண்டும் ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் மத்திய கிழக்குக்கு வீட்டுப் பணிப்பெண்களாகச் செல்லும் இலங்கைப் பெண்களின் எண்ணிக்கை 72 வீதத்தால் குறைந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரை ஆதாரம் காட்டி எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பணிப்பெண்ணான ரிஷானா நவ்பிக் சவுதி அரேபியாவில் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், இலங்கை அரசாங்கம் எடுத்த சில நடவடிக்கைகளை அடுத்தே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக இது குறித்து பிபிசியிடம் பேசிய இலங்கையின் பெண்களின் உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்களில் ஒருவரான சாந்தி சச்சிதானந்தம் கூறுகிறார்.