BREAKING NEWS

Aug 16, 2013

தனது பெயர் முன்மொழியப் பட்டுள்ளமை தொடர்பில் யூசுப் முப்தி


YUSUF MUFTHI

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைமைப் பதவிக்கு தனது பெயர் முன்மொழியப்பட்டுள்ளமை தொடர்பில் அஷ்ஷெய்க் யூசுப் முப்தி ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கை.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைமைப் பதவிக்கு நான் பொருத்தமானவர் என இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் அமீர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். த..வா அமைப்பு ஒன்றின் தலைவர் என்ற வகையில் அவரது கருத்து சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அவதானிக்க முடிகிறது. சமூக விவகாரங்கள் மீதான தனது அக்கறையின் வெளிப்பாடாகவே அவர் இவ்வாறான ஒரு கருத்தை முன்வைத்துள்ளார் எனக் கருதுகிறேன்.

இருந்தபோதிலும் இது தொடர்பான எனது நிலைப்பாட்டை மக்களுக்குத் தெரியப்படுத்துவது எனது கடமை எனக் கருதுகிறேன்.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவராக அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி கடந்த ஜூலை 6 ஆம் திகதி ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். ரண்முத்து ஹோட்டலில் நடைபெற்ற மத்திய சபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட 90 பேரிலிருந்து நிறைவேற்றுக் குழுவுக்கு தெரிவு செய்யப்பட்ட 25 பேரினாலேயே அவர் இரண்டாவது கருத்துக்கு இடமின்றி மீண்டும் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைமைப் பதவிக்கு அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி பொருத்தமானவர் என நிறைவேற்றுக் குழு கருதியதாலும் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக உலமா சபையின் தலைமைப் பதவி மூலம் அவரால் பல பாராட்டத்தக்க சேவைகளை ஆற்ற முடிந்திருக்கிறது என்பதனாலுமே அவர் நான்காவது தடவையாகவும் தலைமைப் பதவியில் அமர்த்தப்பட்டார்.

86 வருட வரலாற்றைக் கொண்ட அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இந்த நாட்டிலே இருக்கின்ற எல்லா த..வா அமைப்புகளை விடவும் பழைமைவாய்ந்தது. பல மூத்த உலமாக்கள் அதில் அங்கம் வகிக்கிறார்கள்.

இவ்வாறான வரலாற்றைக் கொண்ட ஒரு அமைப்பைக் கொச்சைப்படுத்துவதோ அல்லது இந்த அமைப்பிலுள்ள உலமாக்களை தூற்றுவதோ பொருத்தமான செயல் என நான் கருதவில்லை.

ஒரு மனிதனின் சேவையைப் பாராட்டாத சமூகத்திலும் அவரது குறைகளை தூக்கிப்பிடித்து தூற்றுகின்ற சமூகத்திலும் நிச்சயமாக சகவாழ்வு இருக்கப் போவதில்லை என்று இமாம் ஷாபிஈ அவர்கள் கூறியிருக்கிறார்கள். அதனையே நாம் இன்று கண்டு கொண்டிருக்கிறோம்.

எனவேதான் அ.இ.ஜ.உலமாவின் தலைமைப் பதவிக்கு வரவேண்டும் என்ற அபிலாஷை எனக்குக் கிடையாது. இப் பதவியை அடைய வேண்டும் என நான் பகல் கனவு கூட கண்டிருக்கமாட்டேன்.

இந்தப் பதவிக்கு என்னை விடவும் பொருத்தமான எத்தனையோ பேர் இருக்கிறார்கள் என்பதே எனது உறுதியான நிலைப்பாடாகும்.

அந்த வகையில் அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்கு எமது ஜம்இய்யாவின் தலைவராக அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி அவர்களையே நாம் ஏகமனதாக தெரிவு செய்திருக்கிறோம். இந்த விடயங்களை கவனத்திற் கொள்ளுமாறு சகல மக்களையும் வேண்டிக் கொள்கிறேன்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &