வெலிவேரிய பிரதேசத்தில் கடந்த 1ம் திகதி இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த 29 வயது ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவர் இன்று (04) காலை உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, கம்பஹா, வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்ற மோதலின்போது படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் நேற்று இரவு உயிரிழந்தார்.
19 வயதான இவ் இளைஞன் நேற்று (03) இரவு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
மோதலின்போது படுகாயமடைந்த இளைஞன் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை மோதலில் படுகாயமடைந்த ஐவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
ரத்துபஸ்வல பகுதியில் குடிநீரில் இரசாயன திரவியம் சேர்வதாகவும் அதற்கு காரணமான தொழிற்சாலையை மூடுமாறும் வலியுறுத்தி மக்கள் கடந்த முதலாம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது அங்கு சென்ற பாதுகாப்பு படையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலின்போது 17 வயதான மாணவன் உயிரிழந்தார். இதுவரை இம்மோதலில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
