BREAKING NEWS

Jul 28, 2013

பசில் ராஜபக்ச மன்னிப்பு கேட்டார்

பிரித்தானிய சுற்றுலாப் பயணி தங்காலையில் கொலை செய்யப்பட்டதற்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவிடம் மன்னிப்புக் கோரியுள்ளார். 

கடந்த 2011ம் ஆண்டு நத்தார் நாளன்று தங்காலையில் உள்ள விடுதியில், பிரித்தானிய சுற்றுலாப் பயணியான குரம் சேய்க் கொலை செய்யப்பட்டதுடன், அவரது காதலியான ரஸ்யப் பெண், பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டார். இந்தக் குற்றங்களில் ஈடுபட்ட ஆளும்கட்சி உள்ளூர் தலைவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கொலை தொடர்பாக உரிய காலத்தில் நீதி வழங்கப்படவில்லை என்று பிரித்தானியா குற்றம்சாட்டி வருகின்றது. இது தொடர்பாக, மஹிந்த ராஜபக்ஸவை சந்திக்கும் போது பிரச்சினை எழுப்பவுள்ளதாக, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் சைமன் டன்சுக் கூறியதால், அவரை உள்ளடக்கிய பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவுடனான சந்திப்பை மகிந்த ராஜபக்ச நிறுத்தியிருந்தார்.

பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்சவும் பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவைச் சந்திக்காமல் தவிர்த்தார். அதேவேளை, நேற்று முன்தினம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுடன் பிரித்தானியக் குழு கலந்துரையாடியது.

இதன்போது, குரம் சேய்க் கொலை செய்யப்பட்டதற்காக பசில் ராஜபக்ச மன்னிப்புக் கோரியதாகவும், விரைவில் குற்றவாளிகளை சட்டத்தில் முன் நிறுத்துவதாக தம்மிடம் வாக்குறுதி அளித்ததாகவும், பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவின் தலைவர் எலேனர் லைங் தெரிவித்துள்ளார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &