எதிர்வரும் காலங்களில் முஸ்லிம்கள் மீதும், அவர்களின் மதவழிபாட்டு , கலாசார விடயங்களில் தலையிட்டு, வன்முறைகளை பிரயோகிக்கும் தனிநபர்கள் மற்றும் அமைப்புக்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கட்சி தலைவர்களின் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுத்திர கட்சியுடன் இணைத்து ஆளும் தரப்பில் அமைர்த்திருக்கும் கட்சி தலைவர்களின் சந்திப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நேற்று ,வெள்ளிக்கிழமைஅலரி மாளிகையில் நடைபெற்றுள்ளது. இக்கூட்டத்தில் அமைச்சர்களான றிசாத் பதியுத்தீன், ரவூப் ஹக்கீம், அதாவுல்லாஹ் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
இதன் போது முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் அரசாங்கம் தொடர்பில் தோன்றியுள்ள சந்தேகங்கள் பற்றி முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் முறையிட்டுள்ளனர் .இதன்போதே ஜனாதிபதி அமைச்சரவையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் .
முஸ்லிம் சமூக பிரச்சினை தொடர்பாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் முதலில் ஜனாதிபதிக்கு விளக்கங்களை முன்வைத்துள்ளார். அதை தொடர்ந்து ஏனைய முஸ்லிம் அமைச்சர்களும் சமூகத்தின் பிரச்சினைகளை முன்வைத்துள்ளனர்.
இதன் போது பல விடயங்களுடன் பிரதான விடயங்களும் முன்வைக்கப்பட்டுள்ளது. ஒன்று நாட்டில் இஸ்லாத்துக்கும் அதன் கோட்பாடுகளுக்கும் எதிராக செயல்பாடுகளை முன்னெடுப்பவர்கள் மீது தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்பது. இது தொடர்பில் மூன்று முஸ்லிம் அமைச்சர்களும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுருத்தியுள்ளனர். இதன் போது பெளத்த கடும்போக்கு அமைப்புக்கள் பிரசாரம் செய்யும் மிக மோசமான முறைகள் பற்றியும் முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதிக்கு விளக்கியுள்ளனர் .
மற்றும் பொதுபல சேனாவை பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஸ வழிநடத்துவதாகவும் அதற்கு ஜனாதிபதி ஆதரவு வழங்குவதாகவும் முஸ்லிம் மக்கள் கருதுவதாகவும் இது தொடர்பில் பரவலாக பேசுவதாகவும் முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் முறையிட்டுள்ளனர்.
தயட்ட கிருள கண்காட்சிக்கு ஆட்கள திரட்டுவதற்காக கையாளப்பட்ட வழிமுறை கிழக்கு மாகாணத்தில் சில பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் மீது இராணுவத்தினர் அழுத்தங்களை பிரயோகித்தமை, அவர்கள் மீதான விசாரணைகள், என்பனவும் முஸ்லிம்கள் மத்தியில் விசனங்களை ஏற்படுத்தியிருப்பதாகவும் முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் முறையிட்டுள்ளனர்.
இவற்றை செவிமடுத்துகொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சற்று வித்தியாசமான தொனியில், கட்சி தலைவர்களின் சந்திப்பில் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களை நோக்கி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.எந்தவொரு இனவாத அமைப்பையும் நான் போசித்து வளர்க்கவில்லை. அதற்கான தேவையும் எனக்கு இருந்ததில்லை .
எதிர்வரும் காலங்களில் முஸ்லிம்கள் மீதும், அவர்களின் மதவழிபாட்டு , கலாசார விடயங்களில் தலையிட்டு, வன்முறைகளை பிரயோகிக்கும் தனிநபர்கள் மற்றும் அமைப்புக்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் ,வழக்கு பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.