கடந்த 30 ஆண்டுகளாக இலங்கையில் நடைபெற்ற யுத்தத்திற்கு இந்திய அரசுதான் பொறுப்பு என இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கை ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளிக்கையிலேயே பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையின் உச்சகட்ட போர் நடைபெற்ற போது கடைசி 100 நாட்களில் நடைபெற்ற போர் குற்றங்கள் தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுகளின் கீழ் ஐ.நா. மன்றம் விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நா. சபைக்கான இந்தியாவின் முன்னாள் நிரந்தர உறுப்பினர் ஹர்தீப் சிங் பூரி சமீபத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, இலங்கையில் நிகழ்ந்த தீவிரவாதம் குறித்து குரல் எழுப்பாதவர்கள், போர் கால அத்துமீறல்கள் குறித்து விசாரணை கோருவது வேடிக்கையாக உள்ளது என கூறியிருந்தார்.
இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையீடு செய்த 1988ம் ஆண்டின் போது இந்தியாவால் பயிற்சியளிக்கப்பட்ட இலங்கை தீவிரவாதிகள், மாலைதீவின் மீது தாக்குதல் நடத்தியதையும், இச் சம்பவத்தின் பிறகு இலங்கை அரசு சந்தித்த நெருக்கடிகளையும் இந்தியா உணர வேண்டும்´ என்று மேலும் கூறியுள்ளார்.
.................................
விடுதலைப்புலிகளுக்கு இந்தியா ஆயுத பயிற்சியளித்தது குறித்து சர்வதேச நாடுகள் விசாரிக்கவேண்டும் என்று கோருவதற்கு பதிலாக, அப்படியான விசாரணையை இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோதாபய ராஜபக்ஷேவே நடத்தலாம் என்று கூறுகிறார் இந்திய அமைதிப்படையில் இலங்கையில் பணிபுரிந்த இந்திய ராணுவ அதிகாரி கேணல் ஹரிஹரன்.
இலங்கையின் இறுதிப்போரின் போது நடந்த போர் குற்றங்கள் பற்றி விசாரிக்க வேண்டும் என்று கோரும் சர்வதேச நாடுகள், அப்படியானதொரு விசாரணையை, இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிட்டு விடுதலைப்புலிகளுக்கு பயிற்சியளித்த காலத்திலிருந்து துவங்கவேண்டும் என்று இலங்கையின் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷ கூறியிருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கோதாபயவின் இந்த கோரிக்கையானது, இலங்கைக்குள்ளும் சர்வதேச ரீதியிலும் அதிபர் மஹிந்த ராஜபக்ஷ அரசு மீது அதிகரித்துவரும் அழுத்தங்களை திசைதிருப்பும் ஒரு முயற்சியாகவே பார்க்கப்படும் என்று பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார் ஹரிஹரன்.
விடுதலைப்புலிகள் அமைப்புக்கு மட்டுமல்லாமல், இலங்கையின் வேறுபல தமிழ்ப் போராளி குழுக்களுக்கும்கூட 1980களில் இந்திய அரசு பயிற்சியளித்ததாக தெரிவித்த ஹரிஹரன், அந்த பிரச்சனையெல்லாம் 1987 ஆம் ஆண்டு இந்தியா இலங்கை உடன்படிக்கையுடன் முடிவுக்கு வந்துவிட்டதாக தெரிவித்தார்.
ஆனால் இப்போது சர்வதேச சமூகமும், ஐநா மன்றமும் கோருவது 2009 ஆம் ஆண்டில் இலங்கையில் நடந்த இறுதிகட்டப் போரில் நடந்ததாக கூறப்படும் மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்கவேண்டும் என்று தானே தவிர, 25 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்துபோன விவகாரங்களை அல்ல என்று கூறிய ஹரிஹரன், அவற்றை விசாரிக்க வேண்டும் என்று உண்மையிலேயே கோத்தாபய ராஜபக்ஷே விரும்பினால் ஐநாவிடம் அதற்கான கோரிக்கையை முறையாக வைக்கலாம் என்றும், ஒருவேளை ஐநாவோ சர்வதேச நாடுகளோ இதை விசாரிக்க மறுத்தால், இலங்கை அரசாங்கமே அப்படியானதொரு விசாரணையை நடத்தலாம் என்றும் தெரிவித்தார்.