பொது பல சேனவின் பின்னனியில் இந்த அரசாங்கமே செயற்படுவதாக மேல் மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டினார். இதனாலேயே காலியிலுள்ள பொது பல சேனவின் அலுவலகம் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.
முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் ஊடாகவியலாளர் மாநாடு இன்று வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இதில் உரையாற்றும்போது இந்த இயக்கத்தின் தலைவரும் மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
"முஸ்லிம்களுக்கு எதிரான பொது பல சேனவின் பிரசாரம் சங்கிலி போன்று தொடர்ந்துகொண்டு செல்கின்றது. ஹலால் சான்றிதழுடன் இந்த பிரச்சினை நின்றுவிடும் என அனைவரும் எதிர்பார்த்தனர். எனினும் அது நின்றுவிடவில்லை. ஹலால் இலச்சினை நாட்டில் இல்லாவிட்டாலும் எங்களுக்கு ஹலால் தேவை.
இந்த ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையினை அரசாங்கம் பொறுப்பேற்று அரச நிறுவனங்களான இலங்கை தரச்சான்றிதழ் நிறுவனம் மற்றும் முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் ஆகியவற்று வழங்க முடியும்.
ஹலால் விடயத்தில் பொது பல சேனவிற்கு எந்த பிரச்சினையுமில்லை. ஏனென்றால் ஐக்கிய தேசிய கட்சியினரை பொது பல சேனவினர் நாடாளுமன்றத்தில் சந்தித்தபோது முஸ்லிம்களுக்கு மாத்திரம் ஹலால் என்று தெரிவித்தனர்.
எனினும், சிங்கள மக்கள் மத்தியில் பிரபல்யமடைவதற்காக ஹலால் விடயத்தினை முன்வைத்து பிரபயல்யடைந்து விட்டனர். இதனால் தற்போது பொது பல சேனவின் பிரசாரம் ஹிஜாப் மற்றும் முஸ்லிம்களின் வியாபாரம் வரை விரிவடைந்து செல்கின்றது.
நாங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படவில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் சிங்கள மக்கள் மத்தியில் இந்த போலி பிரச்சாரத்தை இவர்களே தூண்டிவிடுகின்றனர்.இதனாலேயே இன்று குருநாகலில் முஸ்லிம் பெண்ணின் ஹிஜாபை பறிக்க முற்பட்ட நபர் செருப்பினால் அடிக்கப்பட்டுள்ளார்.
இதனை தூண்டுவது பொது பல சேனவேயாகும். கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டியில் இடம்பெற்ற பொது பல சேனவின் கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சார மேற்கொள்ளப்பட்டுள்ளது. அடுத்த வாரம் பாணந்துறையில் இடம்பெற்றவுள்ள. இந்த பிரசார நடவடிக்கை கள் தொடர்ந்துகொண்டே செல்கின்றன.
இவ்வாறான சர்ச்சைகளினால் 1983ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவரம் மீண்டும் ஏற்பட்டு விடுமோ என அமைச்சரொருவர் தெரிவித்திருந்தார். பொது பல சேனவின் நடவடிக்கையில் அமைச்சரொருவர் பயந்தால் ஏன் முஸ்லிம்கள் பயப்படமாட்டார்கள் இதற்கு அரசாங்கம் உடனடியாக முடிவு கட்ட வேண்டும்.
ஹலால் சர்ச்சையின்போது அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும் பொது பல சேன ஆகியவற்றை அழைத்து ஒரு மேடையில் வைத்து பேச்சு நடத்தியிருக்கலாம். எனினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதனை மேற்கொள்ளவில்லை.
அத்துடன் இந்தியாவில் தேரர்களை தாக்கியது முஸ்லிம்களை தாக்கியது பொது பல சேன என தெரிவிக்கின்றனர். இது முற்றிலும் தவறாகும். தமிழ் நாட்டில் தேரர்கள் தாக்கப்பட்டமை இது முதற் தடவையல்ல. இதனால் இந்த போலி பிரச்சாரங்களை பொது பல சேன நிறுத்த வேண்டும்.
இந்த முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத கெடுபிடிகளை கண்டித்தும் எதிர்வரும் திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் ஹர்தாலுக்கு முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு அழைப்பு விடுக்கின்றனது. இதற்கான பூரண ஆதரவினை முஸ்லிம்கள் வழங்க வேண்டும்" என்றார்.
