முஸ்லிம்களுக்கு மாத்திரம் ஹலால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பொருட்களை எதிர்காலத்தில் வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஹலால் விவகாரம் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவிற்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும் முஸ்லிம் கவுன்சில் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.
இதன்போதே இந்த இணக்கம் காணப்பட்டுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.
எதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கு மாத்திரம் ஹலால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பொருட்களை வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
அத்துடன் ஏனைய மதத்தினருக்கு ஹலால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பொருட்களை வழங்குவதற்கும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இனவாத பிரசாரங்கள் தொடர்பிலும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
அண்மைக் காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக பெளத்த கடும்போக்காளர்களால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான விரிவான அறிக்கை ஒன்றும் பாதுகாப்புச் செயலாளரிடம் முஸ்லிம் அமைப்புகளால் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கை அகில இலங்கை ஜம்இய்யல் உலமாவினால் ஊடகங்களுக்கு நாளை வெளியிடப்படவுள்ளது.
இந்த சந்திப்பில் பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா, முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட, ஈரானுக்கான முன்னாள் தூதுவர் ஜனாதிபதி சட்டத்தரணி சுஹைர் உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
