BREAKING NEWS

Sep 19, 2012

மாசடைந்த தொடு வில்லைகளால் கண்களுக்கு ஆபத்து


மாசடைந்த நீரில் காணப்படும் ஒரு வகை அமீபாவினால், தொடுவில்லை (கண்டாக்ட் லென்ஸ்) அணிபவர்களின் கண்களின் விழிவெண்படலத்துக்கு பாதிப்பு ஏற்படலாம் என விஞ்ஞானிகளால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தூசி, கடல் நீர், மழைநீர், ஷவர் குளியல் நீர், நீச்சல் தடாகம் என்பவற்றில் காணப்படும் Acanthamoeba எனும் அமீபாவினால், உலகம் முழுவதுமுள்ள, தொடுவில்லை அணியும் மில்லியன் கணக்கான மக்கள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

உண்மையில் பாதிப்பானது சிறிதாக இருக்கலாம். ஆனால், அதற்கான மருத்துவ சிகிச்கைகள் வலிகள் மிகுந்ததாகவும் மிக நீண்டதாகவும் இருக்கும். தொடுவில்லை அணிபவர்கள் இந்த ஆபத்தை எதிர்கொள்கிறனர் என மேற்கு ஸ்கொட்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பியோனா ஹென்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.

இது எங்குமுள்ள  பிரச்சினையாகும் எனக் கூறியுள்ள ஸ்ட்ராத்கிளைட் பல்கலைக்கழத்தின் பேராசிரியரான கிரெக் ரொபர்ட்ஸ், தொடுவில்லையை சிறப்பாக தூய்மையாக்குவதற்கான தீர்வை ஏற்படுத்துவது குறித்து ஆய்வில் ஈடுபட்டுள்ளார்.

அசுத்தமான தொடுவில்லைகள் மற்றும் அதற்கான பாதுகாப்பு பெட்டிகளிலிருந்தும் இந்த அமீபாவை காணக்கூடியதாக இருந்ததாக அபர்தீன் நகரில் நடைபெற்ற பிரித்தானிய விஞ்ஞான விழாவில் தெரிவிக்கப்பட்டதாக பிரித்தானிய பத்திரிகையொன்று குறிப்பிட்டுள்ளது.  

இவ்வாறான தொடுவில்லைகளை கண்களில் அணியும்போது மேற்படி  அமீபா விழிவெண்படலத்தின் வெளிபுறத்திலிருந்து ஊடுருவ  ஆரம்பிப்பதுடன் இனப்பெருக்கமும் செய்யுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கண்களில் அரிப்பு ஏற்படுதல், கண்ணீர் வடிதல், பார்வை மங்கலடைதல், ஒளியில் கண்கூசுதல், மேல் கண்ணிமையில் வீக்கம், தீவிரமான வலி உணர்த்தல் போன்றவை இதற்கான அறிகுறிகளாகும்  என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் பார்வை நிரந்தரமாக இழக்கப்படும் ஆபத்தும் ஏற்படலாம் என கண்மருத்துவரான கிறேம் ஸ்டீவன்ஸன் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டு பதிவுசெய்யப்பட்டவர்களில்; 75 சதவீதமானோர் மருத்துவர்களால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்களாக உள்ளனர் என டாக்டர் ஸ்டீவன்ஸன் கூறியுள்ளார். 

அநேகமானவர்கள் தமது கண்தொடுவில்லை மற்றம்  பாதுகாப்பு பெட்டகங்களை வெளி குழாய் நீரில் கழுவுகின்றனர். இதன்போது நுண்ணுயிர்கள் இலகுவாக தொற்றிக்கொள்கின்றது. பின்பு இந்த தொடுவில்லைகளை அணியும்போது அவை கண்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன. 

தொடுவில்லைகள் மற்றும் தொடுவில்லைகளுக்கான பாதுகாப்பு பெட்டகங்களை தினமும் தூய்மையாக வைத்திருப்பதனூடாக கிருமிகளிடமிருந்து அவற்றை பாதுகாக்கலாம்.

நீச்சலில் இருக்கும்போது கண்ணாடிகள், தொடுவில்லைகள் அணிந்திருப்பதைதை தவிர்த்துக்கொள்ளுமாறு பிரித்தானிய தொடுவில்லைகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறு இல்லாவிடின், தொடுவில்லைகளை அணிந்திருந்ததால் குளிக்கும்போது கண்களை இருக்கமாக மூடிக்கொள்ள வேண்டும் என அச்சங்கம் மேலும் ஆலோசனை தெரிவித்துள்ளது.

'மில்லியன் கணக்கிலான மக்கள் பிரச்சினைகள் இல்லாமல் தொடுவில்லைகளை அணிகின்றனர். தங்களால் இனிமேல் தொடுவில்லைகளை அணிமுடியாது என மக்கள் நினைப்பதை நாங்கள் விரும்பவில்லை. அவ்வாறான நிலை இல்லை. ஆனால் அவர்கள் அவற்றை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்' என டாக்டர் தாரா பீட்டி தெரிவித்துள்ளார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &