எந்த விதத்திலும் தான் சம்பந்தப்படாத விடயம் தொடர்பில் குற்றம் சுமத்தி தன்னை கைது செய்யவோ அல்லது வேறு இடையூறுகளை செய்தாலோ கட்டாயமாக அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப்போவதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் எச்சரித்துள்ளார்.
அரசாங்கம் தனக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால், சிங்களவர்களின் உரிமைகளுக்காக கட்டாயம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவருக்கு தெரியப்படுத்தியுள்ளார். ஞானசார தேரரை கைது செய்ய போவதாக பரவிவரும் வதந்திகள் குறித்து கேட்ட போதே அவர் இதனை கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அளுத்கம பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய ஞானசார தேரர், தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் தலைவர்கள் இருக்கின்ற போதிலும் சிங்களவர்களுக்கு தலைவர் எவருமில்லை எனக் கூறியிருந்தார்.
அதேவேளை ஜப்பானில் பல நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இன்று அதிகாலை நாடு திரும்பினார்.
அளுத்கம பிரதேசத்தில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து பாதுகாப்பு அதிகாரிகளை அழைத்து இன்று காலை பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.
அத்துடன் கோத்தபாய, பொதுபல சேனா அமைப்பின் பிரதிநிதிகளையும் சந்தித்து பேசியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.- தகவல் இணைய ஊடகங்கள்