BREAKING NEWS

Feb 28, 2013

ஹலால் முறையிலேயே தமது உற்பத்திகள்: சிங்கள வர்த்தகர்கள்



ஹலால் முறையிலேயே தமது உற்பத்திகளை தொடர்ந்து மேற்கொள்வோமெனவும் அதனை எவரும் தடுத்துநிறுத்த முடியாதெனவும் நாட்டின் பிரபலமான  உற்பத்தி நிறுவனங்களும், அவற்றின் முதலாளிகளும் உறுதிபட தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்ற கட்டிட தொகுதியில் இன்று வியாழக்கிழமை, 28 ஆம் திகதி நடைபெற்ற ஹலால் தொடர்பில் ஆராயும் அமைச்சரவை உபகுழுவின் கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ரட்னசிறி விக்கிரமநாயக்கா தலைமையில் நடைபெற்றுள்ள இக்கூட்டத்தில் முஸ்லிம் அரசியலவாதிகளான பௌஸி, ஹக்கீம், றிசாத், அதாவுல்லா ஆகியோரும் பங்குகொண்டுள்ளனர். இதன்போது சிங்கள வர்த்தகர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஹலால் முறையிலான உற்பத்தி மற்றும் ஹலால் முத்திரை பதித்த பொருட்களை உற்பத்தி செய்வதற்கு பௌத்த குருமார் எதிர்ப்புத் தெரிவிப்பதையிட்டு நாங்கள் கவலையடைகிறோம் பௌத்த தேரர்களின் இந்த எதிர்ப்பு காரணமாக எமது வர்த்தக நடவடிக்கை பாதிக்கப்படட்டுள்ளது. ஏற்றுமதி வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால் இலங்கையின் பொருளாதாரத்திற்கே அடி விழும் அபாயம் ஏற்படும்.

எமது கடைகளுக்கு பொருட்கள் வாங்கவரும் முஸ்லிம் சிறுவர்,சிறுமியர் கூட ஹலால் பொருட்கள் வேண்டும் என்றே கேட்கின்றனர். ஹலால் முத்திரை பதியப்படட்டுள்ளதா என்று பொருட்களை நோட்டமிடுகின்றனர். இலங்கையில் எங்கும் ஹலால் வியாப்பித்திருக்கையில் ஹலால் பொருட்களையே சிங்கள வர்த்தகர்களாகிய நாங்கள் விற்பனை செய்யவேண்டியுள்ளது.

ஹலால் பொருட்களுக்கு எதிர்ப்பு வெளியிடுவோர் இந்த உண்மையை புரிந்துகொள்ள வேண்டும்.

எது எப்படியிருந்த போதிலும் ஹலால் முறையில்தான எமது உற்பத்தி நடவடிக்கை தொடரும். நாம் அதனை ஒருபோதும் நிறுத்தமாட்டோம். நிறுத்தவும் கூடாது. வேண்டுமானால் பொருட்களின் உற்பத்திக்கு பிறகு பொருட்களை இரண்டாக வகைப்படுத்தி அவற்றில் ஒருதொகை பொருட்களுக்கு ஹலால் முத்திரையும், மற்றைய தொகுதி பொருட்களுக்கு ஹலால் முத்திரை இடாமலும் சந்தைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனினும் இதிலும் நடைமுறைச் சிக்கல்கள் எழும். வர்த்தக நிலையங்களில் பொருட்களை வேறுவேறாக காட்சிப்படுத்த வேண்டியேற்படும் எனவும் சிங்கள வர்த்தகர்கள் இதன்போது மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.


இச்சந்திப்பில் கலந்துகொண்ட எல்லா சிங்கள வர்த்தகர்களினதும் கோரிக்கை ஹலால் உற்பத்தி பொறிமுறைக்கும், ஹலால் முத்திரைக்கும் ஆதரவாகவே அமைந்துள்ளது.

ஹலால் தொடர்பில் ஆராயப்பட்ட அமைச்சரவை உபகுழுவானது சிங்கள வர்த்தகர்களின் கருத்துக்களை உள்வாங்கிக்கொண்ட நிலையில் நிறைவடைந்துள்ளது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &