ஹலால் விடயம் பற்றி பலவாறாக பேசுகிறார்கள்.எனினும் அவ்விடயத்தை விட்டுவிட முடியாது.ஹலால் அடையாளம் பறிக்கப்பட்டால் இன்னும் ஏராளமான விடயங்களையும் இழக்க நேரிடும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் முப்தி ரிஸ்வி தெரிவித்தார்.ஹலால் விடயம் சம்பந்தமாக இன்று ஏற்பட்டிருக்கும் பதட்டமான சூழ்நிலை தொடர்பில் தெளிவுபடுத்தும் மாநாடு நேற்று மக்ரிப் தொழுகையைத் தொடர்ந்து தெஹிவளை பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.ரிஸ்வி முப்தி தொடர்ந்து உரையாற்றுகையில், இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையில் ஒற்றுமை, சகவாழ்வு போன்ற விடயங்களை கட்டியெழுப்ப வேண்டும். நாம் அமைப்பு, இயக்க,தரீக்கா ரீதியாக பிரிந்து செயற்படாமல் நாம் அனைவரும் ஒரே உம்மத் என்ற அடிப்படையில் ஒற்றுமைப்படவேண்டும். அத்தோடு ஏனைய மதத்தவர்களும் நபி (ஸல் ) அவர்களின் உம்மத் என்ற ரீதியில் அவர்களோடும் சகவாழ்வோடு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். ஏனையவர்கள் எமக்கு தீங்கிழைத்தாலும் நாம் அவர்களுக்கு நலவையே நாடவேண்டும்.முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஹலால் ஆலோசனைக்குழுவில் முஸ்லிம் அமைச்சர்களான ரவூப் ஹகீம், ரிஷாட் பதியுதீன் , அதாவுல்லாஹ் , பெளசி ஆகியோரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர். ஆகவே ஹலால் விடயத்தில் எமக்கு சாதகமான தீர்வு கிடைக்குமென நம்புகிறோம்.முஸ்லிம்கள் ஒருபோதும் பயங்கரவாதிகளல்ல. இந்நாட்டுக்காக உயிர்,உடமைகளை தியாகம் செய்தவர்கள்.இந்நாட்டை கட்டிக்காத்தவர்கள். நாட்டை நேசிப்பவர்கள். 'நாட்டை நேசிப்பது ஈமானுடைய பகுதியாகும்.' சிங்கள சமூகத்துக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் இப்போது பெரிய இடைவெளியொன்று ஏற்பட்டுள்ளது.அதனை ஏற்படுத்தியவர்கள் நாம் தான். அதைத்தான் நாம் அனுபவிக்கிறோம். இஸ்லாம் பற்றிய தெளிவை மாற்று மதத்தினருக்கு வழங்கத்தவறிவிட்டோம். இந்நாட்டில் உள்ள பெளத்தர்கள் நல்ல மக்கள். வெளிநாட்டு சக்திகளின் ஊடாட்டமே இவ்வாறான நிலைக்கு காரணமாகும்.குத்பா பிரசங்கங்களை தமிழில் மாத்திரம் ஏன் ஆற்றவேண்டும்.ஏன் சிங்களத்தில் ஆற்றக்கூடாது. இளைய சமூகத்தினராவது சிங்கள மொழியை நன்றாக கற்று பிரசங்கங்களை சிங்களத்தில் நிகழ்த்தி இஸ்லாத்தின் தெளிவை வழங்க வேண்டும். மத் ரஸாக்களுக்கு மட்டும் நிதியுதவி வழங்காது வைத்தியசாலை போன்ற ஏனைய சமூகக்கடமைகளிலும் பங்குதாரர்களாக வேண்டும்.இன்று நாட்டில் எதிர்பாராத தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது..
இவ்வாறான சந்தர்ப்பங்களில் நிதானத்தை கடைப்பிடிக்கவேண்டும். சுன்னத்தான நோன்புகளை நோற்க வேண்டும்.எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜம்இய்யாவை பற்றி குறையாக பேசினார். அவரோடு நாம் தொலைபேசியில் தொடர்புகொண்டு நன்றி தெரிவித்தோம். அவர் குறிப்பிட்டது போல் குறித்த தினத்தில் அவரை சந்திப்பதாக நாம் வாக்குறுயழிக்கவில்லை. ஒருவர் தவறான தகவலை அவருக்கு வழங்கி விட்டார்.பொதுபால சேனா அமைப்புடன் ஊடக விவாதங்களில் ஜம்இய்யா கலந்து கொள்ளவில்லை என முஸ்லிம்களும் குறைபடுகிறார்கள்.எமக்கு அவர்களுடன் விவாதம் செய்ய முடியாது என்பதல்ல அதன் அர்த்தம். விவாதத்தில் அவர்கள் தோல்வி அடைந்துவிட்டால் அதனை பெரும்பான்மை சமூகம் தாங்கிக்கொள்ளுமா? அதன்பின்னரான விபரீதங்கள் எவ்வாறு அமையும்?அத்துடன் பொதுபல சேனா அமைப்புடன் நாம் பேசவேண்டிய அவசியமும் இல்லை.ஜனாதிபதியுடன்தான் நாம் பேசவேண்டும் எனவும் தெரிவித்தார்.இம்மாநாட்டில் 25 மாவட்டங்களும் பிரிக்கப்பட்டு கொழும்பிலுள்ள பிரதான பள்ளிவாசல்களுக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஜம்இய்யாவினது ஆலோசனையுடன் குறித்த பிரதேசங்களை வழிநடத்துவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது