BREAKING NEWS

Feb 18, 2013

பொதுபல சேனாவின் எச்சரிக்கையை ACJU நிராகரிப்பு

நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்படும் பௌத்தசிங்கள கடும்போக்கு அமைப்பான பொதுபல சேனா குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபய ராஜபக்ஸவிடம் நாளை செவ்வாய்கிழமை முறைப்பாடு செய்யப்படுமென அறிவித்துள்ள அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை பொதுபல சேனா முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் விடுக்க அவர்கள் யார் எனவும் மறுகேள்வி எழுப்பியுள்ளது.

ஜம்மியத்துல் உலமா சபையின் செயலாளர் மௌலவி முபாரக் இதுதொடர்பில் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு மேலும் கூறுகையில்,

பொது பலசேனா நேற்று ஞாயிற்றுக்கிழமை மஹரகமவில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தி ஹலால் சான்றிதழை இல்லாதொழிக்க ஒரு மாதகால அவகாசம் வழங்கியுள்ளது. அவர்களின் எச்சரிக்கை மிகப்பாரதூரமானது என்பதை நாங்கள் உணருகிறோம். இந்த எச்சரிக்கை நாட்டின் சமூக ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படுத்தும். எனவே பாதுகாப்புச் செயலாளரிடம் இதுகுறித்து முறைப்பாடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் ஹராத்தை உண்ணமுடியாது. ஹலால் முஸ்லிம்கள் மீது கடமையாக்கப்பட்டது. அதுதொடர்பில் எச்சரிக்கைவிட இனவாத அமைப்பான பொதுபல சேனாவிற்கு எந்த அருகதையும் கிடையாது. அவர்களின் எச்சரிக்கையை நாங்கள் நிராகரிக்கிறோம்.

எங்களுக்கு கால அவகாசம் கொடுக்கும் அதிகாரத்தை பொது பலசேனாவிற்கு வழங்கியது யார். அவர்களுக்கு அந்த அதிகாரம் கிடையாது. அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையானது நிலைமைகளை கூர்ந்து அவதானித்து வருகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமையும் தெஹிவளை பள்ளிவாசலில் இதுதொடர்பில் கலந்துரையாடினோம் எனவும் அவர் மேலும் கூறினார்.

அதேவேளை ஹலாலை விட்டுக்கொடுப்பது அல்லது ஹலாலை பறித்தால் அது இலங்கை முஸ்லிம் உம்மாவின் ஏனைய அடையாளங்களுக்கும் ஆபத்து விளைவிக்கும் என்பதை ஜம்மியத்துல் சபையின் தலைவர் றிஸ்வி முபத்தி நேற்றைய கூட்டத்தில் தெளிவாக விளக்கியதாகவும் அறியவருகிறது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &