BREAKING NEWS

Sep 12, 2012

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் மோசடிகள் இடம்பெறவில்லை: பொலிஸ்


கடந்த ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் போது மோசடிகள் எதுவும் இடம்பெறவில்லை என்று விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

மோசடிகள் இடம்பெற்றதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டதை அடுத்தே மோசடிகள் இடம்பெறவில்லை என்ற தகவல் கிடைக்கப்பெற்றதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

இது தொடர்பில் அவர் கூறியதாவது

'தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் போது குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னரே வினாத்தாள்கள் விநியோகிக்கப்பட்டதாகவும் பரீட்சையின் போதும் மோசடிகள் இடம்பெற்றதாகவும் ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்கவினால் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டிருந்தது.

அத்துடன் மோசடிகள் இடம்பெற்றதாக அவருக்கு தொலைபேசி மூலம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாகக்கூறி அவருக்கு கிடைத்த தொலைபேசி இலக்கங்களை நீதிமன்றில் சமர்ப்பித்திருந்தார்.

இந்த தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினர் ஆசிரியர் சேவைச் சங்க செயலாளருடன் தொடர்புகொண்ட நபர்களிடம் வாக்குமூலங்களையும் பதிவுசெய்துகொண்டனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து மேற்படி பரீட்சையின் போது எவ்வித மோசடிகளும் இடம்பெறவில்லை என தெரியவந்துள்ளது என பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &