மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆங்காங்கே திடீர் திடீரென முளைத்து வரும் புத்தர் சிலைகளால் தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் எழத் தொடங்கியுள்ளன. எனவே அவை நிறுத்தப்பட வேண்டும் என்று கிழக்கு மாகாண சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.
.
மட்டக்களப்பு மாவட்டத்தில் போர் காலத்தில் இராணுவத்தினரும் பொலிஸாரும் முகாமிட்டிருந்த இடங்களில் அவர்களின் வழிபாட்டுக்காக அமைக்கப்பட்ட சிறுசிறு புத்தர் சிலைகளை நிரந்தரமாக்கிக் கொள்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
.
புதிதாக தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களில் புத்தர் சிலைகளை வைத்து அந்த இடத்தில் விகாரைகளை அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று மாவட்டத்தின் பல பிரதேசங்களைச் சேர்ந்த மக்களும் தன்னிடம் முறையிடுவதாகவும் தெரிவித்தார்.
.
மதங்கள் இனங்களுக்கிடையில் குழப்பங்களையும் சந்தேகங்களையும் வளர்ப்பவையாக அவை மாறி விடக் கூடாது. தமிழ் மக்களைக் பொறுத்த வரையில் அவர்கள் பௌத்த மதத்துக்கு எதிரானவர்கள் அல்ல என்றும் சுட்டிக்காட்டினார்.
.
எனவே இவ்வாறான வேலைகளில் ஈடுபடுவோர் அவற்றை நிறுத்தி மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வேலைகளில் ஈடு படவேண்டும். மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தும் செற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் குறித்து அனைவரும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
.
தமிழரின் பாரம்பரிய விழுமியங்களையும், பாரம்பரியங்களையும் விட்டுக்கொடுப்பதற்கோ, அதன் ஊடாக பிரதேசங்களை துண்டாடுவதற்கோ தமிழ் தேசியக் கூட்டமைப்பு இடமளிக்க மாட்டாது என்று தெரிவித்தார்.