BREAKING NEWS

Jul 2, 2013

13 ஆவது குறித்து 12 ஆம் திகதி தீர்ப்பு

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் 17(அ) அத்தியாயத்தின் ஏற்பாடுகளை முழுமையாக நீக்குமாறு கோரும் 21 ஆவது திருத்தம் என தலைப்பிடப்பட்ட தனிநபர் சட்டமூலம் அரசியலமைப்புக்கு உட்பட்டதா? இல்லையா? என்பது தொடர்பில் 12 ஆம் திகதி தீர்ப்பளிக்கப்படும் என்று உயர் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை அறிவித்தது.

ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்னதேரரினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த தனிநபர் சட்டமூலத்தை மாகாண சபைகளின் அனுமதியை பெற்றுக்கொள்வதற்கு அனுப்புவதா? இல்லையா? என்பது தொடர்பிலும் ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் அறிவிப்பது குறித்தும் அன்றையதினமே தீர்மானிக்கப்படும் என்றும் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த தனிநபர் சட்டமூலத்திற்கு எதிராக மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை நேற்று திங்கட்கிழமை ஆராய்ந்தபோதே உயர்நீதிமன்றம் மேற்கண்டவாறு அறிவித்தது.

பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ்இ நீதியரசர்களான சந்திரா ஏக்கநாயக்க மற்றும் சந்தியா ஹெட்டிகே ஆகிய நீதியரசர்கள் குழாமின் முன்னிலையிலே மனு ஆராயப்பட்டது.

ஜாதிக ஹெல உறுமய நாடாளுமன்ற உறுப்பினரான அத்துரலிய ரத்ன தேரரின் தனிநபர் சட்டமூலம் மாகாண சபைகளின் அனுமதியின்றி தவறான முறையில் நாடாளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது அதனை தெளிவுப்படுத்துமாறும் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது.

அரசியலமைப்பின் மூன்று உறுப்புரைகளை நீக்குவதாக இந்த தனிநபர் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை மூன்றையும் நீக்குவது அரசியலமைப்பின் அத்தியாயம் 17 (அ) ஐ நீக்குவதற்கு சமமானதாகும் என்றும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சட்டமூலம் அரசியலமைப்பின் உறுப்புரை 154 ஜி(2)க்கு ஏற்புடையதல்ல என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உறுப்புரைக்கு அமைய ஒரு சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படின் அது நாடாளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்கப்படுவதற்கு முன்னர் சட்டமூலம் தொடர்பிலான அபிபிராயத்தை அறிவதற்காக ஜனாதிபதி அதனை சகல மாகாணசபைகளுக்கும் அனுப்பிவைக்கவேண்டும்.

அரசியலமைப்பின் ஊடாக மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை சாதாரண சட்டத்தின் மூலம் மாற்றுவதற்கு நாடாளுமன்றம் முனையக்கூடாது என்றும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒழுங்கு முறைப்பிரகாரம் இந்த சட்டமூலம் ஒழுங்குபத்திரத்தில் உள்ளடக்கப்படாமையினால் இதனை சட்டமூலமாக்கமுடியாது என்றும் மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்தேஇ 21 ஆவது திருத்தம் என தலைப்பிடப்பட்ட தனிநபர் சட்டமூலமானது அரசியலமைப்புக்கு உட்பட்டதா இல்லையா என்பது தொடர்பில் எதிர்வரும் 12 ஆம் திகதி தீர்ப்பளிக்கப்படும் என்று உயர் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை அறிவித்தது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &