BREAKING NEWS

May 16, 2014

விஷேட ஊடக அறிக்கை - ACJU

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா வெளியிட்டுள்ள விஷேட ஊடக அறிக்கை.

வெகு நீண்ட காலம் நடைபெற்று வந்த யுத்தம் முடிவடைந்த பின், புதிய மற்றும் நல்ல பல எதிர்பார்ப்புக்கள் நாட்டின் மீது உண்மையான அன்பு வைத்துள்ள இலங்கையரின் உள்ளங்களில் துளிர் விட்டன. மூன்று தசாப்தங்களாக வேரூன்றி வந்த குரோதம், வெறுப்பு, சந்தேகம் போன்றவைகள் நீங்கி, கடந்த காலத்தில் ஏற்பட்டது போன்ற துரதிருஷ்ட வசமான நிலை மீண்டும் நம் நாட்டில் ஏற்படாமல் இருப்பதற்கு சகலரும் கைகோர்த்துக் கொள்ள முன் வரும் சுமுகமான சூழல் ஒன்று எற்படும் என பலரும் நம்பினர்.

ஆனால், துரதிருஷ்டவசமாக அதற்கு பதிலாக நாம் காணக்கூடியவை மிகுந்த கவலையையே தருகின்றது. இன மற்றும் மத அடிப்படையில் செயற்படும் தீவிரவாத போக்குள்ள குழுக்கள் ஒருவர் மற்றவரை தூற்றிக்கொண்டும் மோசமாக விமர்சனம் செய்து கொண்டும் மீண்டும் இந்த தேசத்தை முன்பு நாம் கண்டதை விட மிக பயங்கரமான அழிவொன்றின் பால் இட்டுச் செல்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது போன்றதொரு சூழலில், தற்சமயம் நடைபெற்று வரும் சில குழப்பங்களுக்கு இந்நாட்டின் முஸ்லிம்களில் பெரும்பான்மையினரின் ஆதரவு ஒரு சிறிதும் கிடையாது என்பதை ஏனையோருக்கு ஆணித்தரமாக சுட்டிக்காட்டி, இந்த காலகட்டத்தில் முஸ்லிம்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பான வழிகாட்டலை தருவது தமது தலையாய கடமை என்பதை உணர்ந்துள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, இவ்வூடகப் பிரகடனத்தை மேற்கொள்ள முடிவெடுத்தது.

மத மற்றும் இன ஒற்றுமை சீர்குழைவதற்கான முதுக்கியமான காரணிகள் சிலவற்றை நமது அமைப்பு இனங்கண்டுள்ளது. அதில் முதலாவது விடயம் ஒருவருடைய மதத்தை மற்றவருக்குத் தினிக்க முயற்சிப்பதாகும். இதை இஸ்லாம் ஒரு போதும் ஏற்பதில்லை.

‘மார்க்கத்தில் வற்புறுத்தல் கிடையாது’ (2:256)
என்றே திருக் குர்ஆன் கூறுகின்றது.

பிரச்சினைகளை தோற்றுவிக்கும் அடுத்த விடயம் என்னவெனில், ஒருவர் மற்றவரின் மதங்களையும் மதத் தலைவர்களையும் தூற்றுவதாகும். இதுவும் இஸ்லாமிய வழிமுறைக்கு முற்றிலும் மாற்றமானதே. இதை எவர் செய்தாலும் முஸ்லிம்களாகிய நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். இது தொடர்பாக திருமறையில்

‘அவர்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் தூற்ற வேண்டாம்’ (6:108)
என்றே வந்துள்ளது.

ஒரு சில வழிதவறியவர்களின் இது போன்ற செயற்பாடுகள் தொடர்பாக நமது கவலையை தெரிவித்துக் கொள்வதோடு இவற்றை இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களின் பெரும்பான்மையினர் அங்கீகரிப்பதில்லை என்பதையும் இங்கு ஆணித்தரமாக குறிப்பிட விரும்புகின்றோம். மத ஒற்றுமையை சீர்குழைக்கும் இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்பவர்கள் யாராக இருப்பினும் அவர்களுக்குத் தக்க தண்டனை வழங்க வேண்டும் என்றும் நாம் தொடர்புடைய அதிகாரிகளை கேட்டுக்கொள்கின்றோம்.

 

மத இணக்கப்பாட்டை பாதிக்கும் அடுத்த விடயமாக மத சகிப்புத் தன்மை இல்லாமையை நாம் காண்கின்றோம். பல்லின கலாசாரம் என்பது உலகமே இன்று ஏற்றுள்ள ஒரு யதார்த்த நிலையாகும். ஆக, மத சகிப்புத் தன்மையை இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

‘விரும்பியவர்கள் ஏற்கட்டும்.

விரும்பியவர்கள் மறுக்கட்டும்’ (18:29)
என்று கூறும் திருக்குர்ஆன்,

முழு மனித குலத்தையும் ஒரு ஆண் பெண் ஜோடியில் இருந்தே படைத்ததாகவும், ஒருவரை ஒருவர் அடையாளம் காண்பதற்கே அவர்களை குலங்களாகவம் கோத்திரங்களாகவும் பிரித்ததாகவும், இறைவனின் பார்வையில் மேலானவர் உள்ளச்சத்தால் உயர்ந்தவரே(49:13)
என்று தான் திருமறை கூறுகின்றது.

இறுதியாக சகவாழ்வு தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வழங்கி வரும் வழிநடத்தல்களை பேணியவாறு சகல இன மக்களுடனும் சகோதரத்துவம் மற்றும் பரஸ்பர நட்புடன் நடந்து கொள்ளுமாறு இந்நாட்டு முஸ்லிம்களை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கேட்டுக் கொள்கின்றது. அதே போன்று, நாம் மேலே குறிப்பிட்டது போல ஒரு சிலர் மேற்கொள்ளும் முறைகெட்ட செயல்கள், இந்நாட்டில் வாழும் சகல முஸ்லிம்களினதும் எண்ணத்தை பிரதிபலிப்பதாக எண்ண வேண்டாம் எனவும் பௌத்த, ஹிந்து மற்றும் கிறிஸ்தவ சகோதரர்களிடம் நாம் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். அதே போன்று, ஏற்றத்தாழ்வோ இன மத சார்புகளோ இன்றி சகலருடைய விடயத்திலும் சட்டத்தை பாரபட்சமின்றி நடைமுறைப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நாம் கேட்டுக்கொள்கின்றோம். அது போன்ற நியாயமான வழிமுறையை ஒழுகுவதன் மூலமே அமைதி மற்றும் மகிழ்ச்சியுடன் நாம் அனைவரும் இங்கு வாழ்வது சாத்தியமாகும்.

நம்மிடையே தோன்றும் பிரச்சினைகளை பேச்சு வார்த்தை மூலம் அமைதி வழியில் தீர்த்தவர்களாக இலங்கைத் தாயின் பிள்ளைகளாக கை கோர்க்க நாம் முன் வருவோமாக. சுபிட்சமான ஒரு தேசமாக நமது நாட்டை மாற்ற நாம் அனைவரும் பங்களிப்பு செய்யவும் முன் வருவோமாக.

அஷ் ஷைக் ஃபாசில் ஃபாருக்

செயலாளர்

ஊடகப் பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &