BREAKING NEWS

Jan 13, 2014

அவசர கால முதல் உதவி முறைகள்

அவசர காலத்திற்கான முதல் உதவி முறைகள்
விபத்தில் சிக்கிய ஒருவருக்கு கிடைக்கும் முதல் உதவி தான் உயிரை காப்பாற்றும். மருத்துவமனை போய்ச் சேரும் வரை ஒவ்வொரு நிமிடமும் பொன்னான காலம் டாக்டர் வரும் வரையிலோ அல்லது மருத்துவமனைக்கு போய்ச்சேரும் வரையிலோ பாதிக்கப்பட்டவருக்கு நீங்களும் உதவலாம். 

அதற்கு ஒவ்வொருவரிடமும் மற்றவரை காப்பாற்ற வேண்டும் என்ற அக்கரை, அர்ப்பணிப்பு உணர்வுடன் துணிச்சலும் இருக்க வேண்டும். முதல் உதவி சிகிச்சை முறைகள் சிலவற்றை இங்கே பார்ப்போம். நினைவு இழத்தலுக்கான பொதுவான காரணங்கள்: 

* குடிபோதை 
* தலையில் அடிபடுதல் 
* காக்கை வலிப்பு 
* அதிர்ச்சி 
* வேனல் அதிர்ச்சி 
* உடலில் விஷம் கலத்தல் 
* மூளைத்தாக்கு 
* நீரிழிவு 
* மாரடைப்பு 
* மயக்கமடைதல் (பீதி, பலவீனம், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைதல் முதலான காரணங்களால்) ஒருவர் நினைவிழந்தது எதனால் என்று தெரியாவிட்டால்,

1 . அவர் சுவாசம் ஒழுங்காக இருக்கிறதா என்று பார்க்கவும். இல்லை என்றால் அவருடைய தலையைப் பின்புறம் நன்றாகச் சாய்த்துத் தாடையையும் நாக்கையும் முன்னுக்கு இழுக்கவும். அவர் தொண்டையில் ஏதாவது அடைத்துக் கொண்டிருந்தால், அதை வெளியே எடுத்து விடவும். அவர் சுவாசிக்காமல் இருந்தால் உடனடியாக வாய்க்குள் - வாய் சுவாச முறையை மேற்கொள்ளவும். 

2. ரத்தம் அதிக அளவில் வெயியேறிக் கொண்டிருக்கிறதா என்பதை கவனிக்கவும். அதனை உடனே கட்டுப்படுத்தவும் கைகளில் ரத்தம் படாமலிருக்க கை உறைகள் அல்லது பிளாஸ்டிக் கவர்கள் அணியவும். 

3. நாடித்துடிப்பு அல்லது இதயத்துடிப்பு இருக்கிறதா, என்பதை கவனிக்கவும். இதயத்துடிப்பு நின்றிருந்தால் உடனே இதயத்தைப் பிடித்துவிடும் முறையை மேற்கொள்ளவும். 

4. அதிர்ச்சி அடைந்த நிலையில் அவர் இருக்கிறாரா என்று பாருங்கள் (பிசுபிசுப்பான வெளிறிய தோல்; தளர்ந்த வேகமான நாடித் துடிப்பு) அப்படி இருந்தால் கால்களைவிடச் சற்றுத் தாழ்வாகத் தலை இருக்கும்படி படுக்கவைக்கவும். ஆடைகளைத் தளத்தி விடவும். 

5. வெப்பத்தாக்கு, மூளைத்தாக்கு, இதயப் பிரச்சினைகள், தலையில் காயம் போன்றவை இருக்கக்கூடுமா என்று பார்க்கவும் (வியர்க்காதிருத்தல், கடுமையான காய்ச்சல், சூடான சிவந்த தோல்) அப்படியிருந்தால் அவர் மீது வெயில் படாதவாறு செய்யவும். கால்களைவிடத் தலை உயர்ந்து இருக்குமாறு வைக்கவும். வெப்பத்தாக்காக இருந்தால் குளிர்ந்த நீரை (முடிந்தால் ஐஸ் நீரை) அவர் உடல் மீது தெளிக்கவும். 

சுவாசம் நின்றுவிட்டால் என்ன செய்ய வேண்டும்? 

சுவாசம் நின்று போவதற்கான பொதுவான காரணங்கள்:

* தொண்டையில் ஏதாவது சிக்கிக் கொள்ளுதல் 
* நினைவிழந்த ஒருவரின் தொண்டையில் அவருடைய நாக்கு அல்லது கெட்டியான கோழை அடைத்துக் கொள்ளுதல் 
* நீரில் மூழ்குதல், புகையினால் மூச்சு மூட்டுதல் அல்லது உடம்பில் விஷம் கலத்தல். 
* தலையில் அல்லது மார்பில் பலமாக அடிபடுதல் 
* மாரடைப்பு ஒருவர் சுவாசிக்கவில்லை என்றால் 3 நிமிடங்களுக்குள் அவர் இறந்து விடுவார். 

வாய்க்குள் - வாய் சுவாச முறை : 

பின்வரும் முறையில் எவ்வளவு விரைவாகச் செயல்படமுடியுமோ அந்தளவிற்கு விரைவாகச் செயல்படுங்கள்: 

முதலாவதாக, வாயில் அல்லது தொண்டையில் ஏதாவது சிக்கிக் கொண்டிருந்தால் அதை உடனடியாக அகற்றவும். நாக்கை வெளியே இழுக்கவும். தொண்டையில் கோழை இருந்தால் விரைவாக அதை அகற்றவும். 

இரண்டாவதாக, அவரை மல்லாந்து படுக்க வைக்கவும், தலையை நன்றாகப் பின்னனுக்கு வளைத்து, தாடையை முன்னுக்கு இழுக்கவும். மூன்றாவதாக, அவருடைய நாசித் துவாரங்களை உங்கள் விரல்களால் மூடிக் கொண்டு அவரது வாயைத் திறக்கவும். 

அவருடைய வாயை உங்கள் வாயால் மூடிக் கொண்டு அவருடைய மார்பு உயரும்படியாக, வலுவாக ஊதவும், பிறந்த குழந்தைகளுக்கு நிமிடத்திற்கு 25 முறை மிகவும் மென்மையாக வாயிலிருந்து மட்டும் ஊதவும்; ஆழ்ந்த மூச்சு எடுத்து ஊதக் கூடாது. 

அவர் தானாகவே சுவாசிக்க ஆரம்பிக்கும் வரை அல்லது அவர் இறந்து விட்டார் என்பது நிச்சயமாகும் வரை வாய்க்குள் - வாய் சுவாச முறையைத் தொடரவும். சில சமயங்களில தொடர்ந்து ஒரு மணி நேரம் அல்லது அதற்கும் மேலாக இவ்வாறு செய்ய வேண்டி இருக்கலாம். 

இதயத்தைப் பிடித்து விடுவதிலுள்ள பிரச்சனைகள்: 

இரு கையை வைத்து அழுத்தும்போது அதிகமாக அழுத்தக்கூடாது. அதிகம் அழுத்தினால் மார்பு எலும்பு முறியும், முறியும் விலா எலும்பு ஈரலைக் குத்தி விடலாம். அவர் அதிர்ச்சியில் இருக்கிறாராப (முகம் வேர்த்து,தோல் வெளுத்து, பலமில்லாமல், நாடிதுடிப்பு அதிகரித்து) என்பதைக் கவனிக்கவும். 

இது வெப்ப அயர்ச்சியாக இருக்கலாமா? (வியர்வையில்லாமல், அதிக காய்ச்சல், சிவந்த தோல்) அப்படி இருந்தால் அவரைத் தலையை உயரத்தில் வைத்து, நிழலில் படுக்க வைக்கவும், கழுத்தை வளைக்க வேண்டாம். 

இதயத்தை பிடித்துவிடும் முறை: 

* மூச்சு நின்று போன வரை மல்லாக்கப்படுக்க வைக்க வேண்டும். 
* அவர் பக்கத்தில் மண்டியிட்டு, அவர் தாடையைப் பிடித்து தலையை நிமிர்த்த வேண்டும். * வலது கையில் கீழ் பாகத்தை மார்பின் நடுவில் வைத்து அதன்மேல் இடது கையை வைக்கவும். 
* முட்டியை நேராக வைத்து நெஞ்செலும்பு நடுவில் 1 முதல் 2 அங் குலம் வரை கீழ் அழுத்தவும். பின் கையை எடுக்காமல் அழுத்தத்தை நிறுத்தவும். ஒரு நிமிடத்திற்கு 60 - 80 தடவை இந்த முறையைக் கையாளவும். 

சிறு பிள்ளைகளுக்கு இரு விரல்களை மட்டும் வைத்து அழுத்தவும், மூச்சும், இதயத்துடிப்பும் நின்றுவிட்டால் மார்பை அழுத்துவதையும் வாய்க்குள் - வாய் சுவாச முறையையும் செய்யவும். இருவர் இருந்தால் ஒருவர் அழுத்தி விட மற்றவர் வாய்க்குள் - வாய் சுவாச முறை செய்யவும். 

ஒருவர் தானே மூச்சுவிடும் வரை அல்லது அவர் இறந்தார் என்ற நிலை அறியும் வரை இந்த முறைகளைக் கையாளவும். அரைமணி நேரம் செய்தும் ஒரு முன்னேற்றமும் இல்லாவிட்டால் நிறுத்தவும். 

ரத்தப் போக்கு இருந்தால் பின்வருவனவற்றைச் செய்யவும் முறை : 

1. காயம் பட்ட இடத்தைச் சற்று உயர்த்திப் பிடிக்கவும் (ரத்தப் போக்கைக் குறைக்க) 

2. சுத்தமான ஒரு துணியை (துணி எதுவும் இல்லாவிட்டால் உறை அணிந்து கொண்டு உங்கள் கையை) நேரடியாகக் காயத்தின் மீது வைத்து ரத்தப் போக்கு நிற்கும்வரை அழுத்திப்பிடித்துக் கொண்டிருக்கவும். 

15 நிமிடமோ சில சமயங்களில் ஒரு மணி நேரமோ அல்லது அதற்கும் அதிகமாகவோ கூட இவ்வாறு செய்ய வேண்டி இருக்கலாம். இதனால் பெரும்பாலான காயங்களிலிருந்து ஏற்படும் ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தலாம் - சிலசமயம் உடலின் ஒரு பகுதி வெட்டப்பட்டாலும் கூட. 

3. காயத்தின் மீது அழுத்திப் பிடித்தும் கூட இரத்தப் போக்குக் கட்டுப்படாமல் ரத்தம் மிகுதியாக வந்து கொண்டிருந்தால், 

- காயத்தின் மேல் தொடர்ந்து அழுத்திப் பிடித்துக் கொண்டிருக்கவும். 

- அடிப்பட்ட பகுதியை எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயர்த்திப் பிடிக்கவும். 

- கையில் அல்லது காலில் காயம்பட்டிருந்தால், காயத்திற்குச் சற்றுத் தள்ளி மேல் பகுதியில் படத்திலுள்ள மாதிரி கட்டுப் போடவும். ரத்தப் போக்குக் கட்டுப்படும் வகையில் கட்டை இறுக்கவும். கை அல்லது கால் நீலமாக மாறும் அளவுக்குக் கட்டை இறுக்க வேண்டாம். 

- உடலிலிருந்து காயம்பட்ட பகுதிகள் எந்த நாளத்திலிருந்து ரத்தம் வருகிறதோ அந்த நாளத்தின் அழுத்த முனைகளை விரல்களைக் கொண்டு எலும்பு தென்படும் வரை அழுத்தவும். இது ரத்தப் போக்கைக் குறைக்க உதவும். 

- ரத்தப்போக்கு நின்றுவிட்டதை அறிய குறைந்த பட்சம் 20 நிமிடங்களாவது அழுத்திப் பிடிக்கவும். 

- கட்டுப் போடுவதற்கு மடித்த துணியையோ அல்லது அகலமான `பெல்ட்' டையோ பயன்படுத்தவும். மெல்லிய கயிறு, நைலான், பிளாஸ்டிக் கயிறு முதலியவற்றை ஒரு போதும் பயன்படுத்தக் கூடாது. 

முன்னெச்சரிக்கைகள் :  

* நேரடியாகக் காயத்தின் மீது அழுத்திப் பிடித்தும் கட்டுப்படுத்த முடியாத அளவு இரத்தப்போக்குக் கடுமையாக இருந்தால் மட்டுமே கட்டுப் போட வேண்டும். 

* கட்டு இன்னும் அவசியமா என்று தெரிந்து கொள்வதற்கு, ரத்த ஓட்டத்திற்கு ஏதுவாக அரை மணி நேரத்திற்கு ஒரு முறை கட்டைச் சற்று நேரம் தளர்த்திவிடவும். வெகு நேரம் கட்டை அவிழ்க்காமல் விட்டு விட்டால் கையையோ காலையோ அகற்ற வேண்டிய அளவுக்குப் பாதிப்பு ஏற்படலாம். 

* ரத்தப் போக்கை நிறுத்த ஒருபோதும் மண், சாணம், மண்ணெண்ணெய், சுண்ணாம்பு அல்லது காப்பிப் பொடியைப் பயன்படுத்தாதீர்கள். 

* காயம் அல்லது இரத்தப் போக்கு கடுமையானதாக இருந்தால் அதிர்ச்சி ஏற்படுவதைத் தடுக்கப் பாதத்தை உயர்த்தித் தலையைத் தாழ்வாக வைக்கவும். 

* நாடித்துடிப்பு, இதயத்தடிப்பு இருக்கிறதாப என்று கவனிக்கவும். இல்லாவிட்டால் இதய தசையைப் பிடித்து விடவும். 

* பாதிக்கபட்டவர்களுக்கு உதவுபவர்களின் கையில் காயமோ வெட்டோ இருந்தால் அதில் ரத்தம் படாமலிருக்க கையுறை அல்லது பிளாஸ்டிக் பையைப் பயன்படுத்தவும்.

MORE DETAILS:
SinaaMedicare
Assalafiyya Shopping Complex,
Kandy Road,
Paragahadeniya. Kurunegala
0374 982 659
0717 367 287
sinaamedicare@gmail.com
https://www.facebook.com/SinaamMedicare

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &