BREAKING NEWS

Dec 16, 2014

வெற்றியுடன் தாய் மண்ணில் கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவுசெய்த மஹேல, சங்கா..!

அபார வெற்றியுடன் தாய் மண்ணில் இறுதிப் போட்டி ஆடி முடித்த மஹேல, சங்கா..!
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற 7 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை இலங்கை அணி 5ற்கு 2 என்ற கணக்கில் தன்வசப்படுத்தியுள்ளது. 

கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இன்று நடைபெற்ற 7வதும் இறுதியுமான போட்டியில் இலங்கை அணி 87 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. 

போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 302 ஓட்டங்களைப் பெற்றது. 

ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி அசத்திய திலகரட்ன தில்ஷான் 101 ஓட்டங்களையும் மத்திய வரிசையில் வந்து அதிரடி ஆட்டத்தை வௌிப்படுத்திய தினேஸ் சந்திமால் 55 ஓட்டங்களையும் திசர பெரேரா 54 ஓட்டங்களையும் பெற்றனர். 

பந்துவீச்சில் இங்கிலாந்து சார்பில் ஜோர்தான் மற்றும் அலி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர். 

பதிலுக்கு 303 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி ஆரம்பம் முதலே தடுமாறியதை காண முடிந்தது. 

இங்கிலாந்து அணி சார்பில் ரூட் மாத்திரமே சிறப்பாக ஆடி 80 ஓட்டங்களைப் பெற்றார். ஏனையவர்கள் பெரிதாக சோபிக்கவில்லை. 

இறுதியில் இங்கிலாந்து அணி 45.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 215 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 87 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. 

இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்த்தன ஆகியோர் எதிர்வரும் உலகக் கிண்ணத் தொடருடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் இன்றைய தினம் தமது சொந்த மண்ணில் இறுதிப் போட்டியில் ஆடி இருந்தனர். 

எனினும் அவர்களால் எதிர்பார்த்த அளவு ஓட்டங்களை குவிக்க முடியவில்லை. சங்கக்கார 33 ஓட்டங்களையும் மஹேல 28 ஓட்டங்களையும் பெற்றனர். 

இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டத்தின் போது இறுதியில் பந்துவீச அழைக்கப்பட்ட மஹேல ஜயவர்த்தன 1.5 ஓவர்கள் பந்து வீசி ஒரு விக்கெட்டினை வீழ்த்தியமை ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. 

போட்டியின் ஆட்ட நாயகன் மற்றும் தொடராட்ட நாயகன் விருதை திலகரட்ன தில்ஷான் பெற்றுக் கொண்டார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &