BREAKING NEWS

Jan 11, 2014

மலிங்கவை தக்க வைத்துக் கொண்ட மும்பை இந்தியன்ஸ்


இந்தியன் பிறீமியர் லீக் தொடரின் 7வது பருவகாலம் இவ்வருடம் இடம்பெறவுள்ள நிலையில், அதற்கு முன்னதான ஏலத்திற்கு முன்னர் அணிகள் தங்களது முன்னாள் வீரர்களைத் தக்க வைத்து வருகின்றன. இதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி றோகித் சர்மா, லசித் மலிங்க, கெரான் பொலார்ட், ஹர்பஜன் சிங், அம்பத்தி ராயுடு ஆகியோரைத் தக்க வைத்துள்ளது. கிங்ஸ் லெவின் பஞ்சாப் அணி டேவிட் மில்லரையும், மனொன் வோக்றாவையும் தக்க வைத்துள்ளது.

ஒவ்வோர் அணியும் அதிகபட்சமாக தலா 5 அணிகளைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதோடு, அந்த 5 வீரர்களும் ஏலத்தில் உள்ளடக்கப்படமாட்டார்கள். அத்தோடு தங்களது அணியில் விளையாடிய வீரர்களை ஏலத்தின் போது மீண்டும் வாங்குவதற்கும் அணிகளுக்கு வாய்ப்புக்களுள்ளன. ஒரு வீரரை வேறோர் அணி ஏலத்தில் பெற்ற பின்னர், அவ்வணி வாங்கிய அதே விலைக்கு அவரது பழைய அணி அவரை வாங்கிக் கொள்ள முடியும். 3 தொடக்கம் 5 வீரர்களைத் தக்க வைத்துக் கொள்ளும் அணிகளுக்கு இதற்கான ஒரு வாய்ப்பும், ஒன்று தொடக்கம் இரண்டு வரையிலான வீரர்களைத் தக்க வைப்பவர்களுக்கு இதற்கான இரண்டு வாய்ப்புக்களும், எந்தவொரு வீரரையும் தக்க வைக்காத அணிகளுக்கு இவ்வாறான 3 வாய்ப்புகளும் வழங்கப்படும்.

இந்நிலையிலேயே மும்பை இந்தியன்ஸ் அணி 5 வீரர்களைத் தக்க வைத்துள்ளது. இதில், அண்மைய ஆஷஸ் தொடரின் நாயகன் மிற்சல் ஜோன்சனை அவ்வணி தக்க வைத்துக் கொள்ளவில்லை. அணித்தலைவர் றோகித் சர்மா, வேகப்பந்த வீச்சாளர் லசித் மலிங்க, சகலதுறை வீரர் கெரான் பொலார்ட், சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், விக்கெட் காப்பாளர் அம்பத்தி ராயுடு ஆகியோரைத் தக்க வைத்துள்ளது.

கிங்ஸ் லெவின் பஞ்சாப் அணி தென்னாபிரிக்க அதிரடித் துடுப்பாட்ட வீரர் டேவிட் மில்லரையும், பெரிதளவில் அறியப்படாத இளம் வீரர் மனொன் வோக்றாவையும் தக்க வைத்துள்ளது.

இதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தின் பின்னர் தனது அணியின் வீரர் ஒருவரையும், கிங்ஸ் லெவின் பஞ்சாப் அணிக்கு அவ்வாறான 2 வாய்ப்புக்களும் கிடைக்கப்பெறும்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &