இலங்கை முஸ்லிம்கள் தங்களின் இருப்பை உறுதி செய்து கொள்வதற்கு எந்தத் திசையை நோக்கிச் செல்லுவதென்று விழித்துக் கொண்டிருக்கின்றார்கள். இன்று இலங்கை முஸ்லிம்களின் திக்குத் தெரியாத காட்டில் கண்களை கட்டிக் கொண்டு விடப்பட்டவர்களாகவே இருந்து கொண்டிருக்கின்றார்கள். யாரை நம்பி தங்களது இருப்புக்கான பயணத்தைத் மேற்கொள்வது என்பதே இலங்கை முஸ்லிம்களின் நிலைப்பாடாக இருக்கின்றது.
இன்று முஸ்லிம்கள் அரசியல் அநாதைகளாகவே இருந்து கொண்டிருக்கின்றார்கள். 2011ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அநுராதபுரத்தில் உள்ள தர்க்கா பொலிஸார் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே பட்டப்பகலில் பௌத்த இனவாதிகளினால் தகர்த்து எறியப்பட்டது. அன்று பகிரங்கமாக முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்களின் மீது பௌத்த இனவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் இன்று மஹியங்கனை பள்ளிவாசலில் வந்து நிற்கின்றது. நாளை எந்தப் பள்ளிவாசல் தாக்கப்படுமென்ற அச்சத்தோடுதான் முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
இத்தகையதொரு சூழ்நிலையில் முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டிருக்கையில் அரசாங்கம் மத்தி, வடமத்தி, வடக்கு ஆகிய மாகாண சபைகளுக்கான தேர்தல்களை செப்டம்பர் மாதம் நடத்த இருக்கின்றது. முஸ்லிம்கள் தங்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அடக்கு முறைகளுக்கு மத்தியில் மேற் சொன்ன மாகாணங்களில் தங்களுக்கான மக்கள் பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய அவசியத்திலும் இருந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனாலும் தாங்கள் தெரிவு செய்கின்ற மக்கள் பிரதிநிதிகள் தங்களின் குரலாக தொழிற்படுவார்களா என்ற வினாக்களும் முஸ்லிம்களிடையே எழுந்து கொண்டிருக்கின்றன.
ஆயினும், வடமத்தி, வடக்கு, மத்தி ஆகிய மாகாண சபைகளுக்கான தேர்தலில் முஸ்லிம்கள் தங்களுக்கான மக்கள் பிரதிநிதிகளைத் பெற்றுக் கொள்ள வேண்டுமாக இருந்தால் முஸ்லிம் கட்சிகளும், முஸ்லிம் அரசியல் தலைமைகளும் ஒற்றுமைப்படல் வேண்டும். முஸ்லிம் அரசியல்வாதிகள் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமைப்படல் வேண்டும். இந்த ஒற்றுமை மூலமே முஸ்லிம்களுக்கான மக்கள் பிரதிநிதியை இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடியும்.
சமூகத்திற்காகவே அரசியல் செய்து கொண்டிருக்கின்றோம் என்று சொல்லிக் கொள்ளும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தங்களுக்கான அரசியலைச் செய்து வயிறு வளர்த்துக் கொண்டிருக்கின்றார்கள். பச்சைச் சுயநலத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டு ஒற்றுமைப்பட வேண்டுமென்று கூறிக் கொண்டிருக்கின்றார்களே அல்லாமல் அதற்கான ஆரம்ப வேலைகளைக் கூட செய்யாது இருக்கின்றார்கள். கட்சிகள் ஒற்றுமைப்பட்டு விட்டால் அவர் தலைவாராகி விடுவார், இவர் தலைவராகி விடுவார் என்ற தாழ்வு மனப்பான்மையில் இருந்து கொண்டிருக்கின்ற முஸ்லிம் அரசியல் தலைமைகள் முஸ்லி;களுக்கு அரசியலில் ஒரு விடிவை ஏற்படுத்தித் தருவார்கள் என்று நம்புவது முயலுக்கு கொம்பு முளைத்த கதையாகவே இருக்கும்.
முஸ்லிம்களின் பள்ளிவாசல்களை வேண்டுமென்று தாக்கிக் கொண்டு இருக்கின்ற பௌத்த இனவாதிகளை சட்டத்திற்கு முன் கொண்டு வருவதற்கு சக்தியற்ற தலைவர்களையே முஸ்லிம்கள் தங்களின் அரசியல் தலைமைகளாக தேர்ந்தெடுத்துள்ளார்கள். பள்ளிவாசல்களின் நிர்வாகிகளை அரசியல் அதிகாரத்தினைக் கொண்டு நியமிக்க போட்டி போட்டுக் கொண்டிருக்கும் முஸ்லிம் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் அப்பள்ளிவாசல்களை பாதுகாப்பதற்கு போட்டி போட்டுக் கொண்டு தொழிற்படுவதற்கு பதிலாக போட்டி போட்டிக் கொண்டு சோம்பிப் போய் உள்ளார்கள்.
முஸ்லிம் தலைவர்களின் இத்தகையதொரு பின்னணியில்தான் வட மாகாணம், மத்திய மாகாணம், வடமத்திய மாகாணம் ஆகிய சபைகளுக்கான தேர்தல்கள் செப்டம்பர் மாதம் நடைபெவுள்ளன. இந்தத் தேர்தலில் முஸ்லிம்கள் தங்களின் மக்கள் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்ள முடியாத அரசியல் சூழ்நிலையே காணப்படுகின்றது. முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஒற்றுமைப்பட்டு இத்தேர்தல்களை சந்திக்க வேண்டுமென்ற கோரிக்கைகளின் அடிப்டையில் கடந்த செவ்வாய்க்கிழமை (23.07.2013) மு.காவின் தலைவர் ஹக்கிமும், அ.இ.மு.கா தலைவர் றிசாட் பதியுதீனும் சந்தித்துப் பேச இருப்பதாக தெரிவிக்கப்பட்டன. இறுதியில் இப்பேச்சுவார்த்தை காலவரையின்றி ஒத்தி போடப்பட்டுள்ளது. முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அவசரமாக செய்ய வேண்டியதை செய்ய மாட்டார்கள் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணமாகும்.
முஸ்லிம்களின் வாக்குகளை பல கட்சிகளுக்கும் சிதறடிக்கச் செய்து முஸ்லிம்களின் மக்கள் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதே பேரினவாதிகளின் முழுக் கவனமுமாகும். முஸ்லிம் கட்சிகள் ஒற்றுமைப்பட்டு விட்டால் அவர்களின் அரசியல் பலம் அதிகரித்து விடுமென்ற காரணத்தினால் பேரினவாதிகள் முஸ்லிம் கட்சிகளை ஒற்றுமைப்படுத்துவதற்கு எடுக்கப்படுகின்ற அனைத்துக் காரியங்களையும் தடுத்துக் கொண்டே இருப்பார்கள். இதனை முஸ்லிம் அரசியல் கட்சிகள் புரிந்து கொண்டுள்ள போதிலும், பேரினவாத கூண்டுக்குள் இருந்து வெளியேற முடியாத அளவிற்கு அவர்களின் கைககளும் கால்களும் கட்டப்பட்டுள்ளன.
மூன்று மாகாண சபைகளுக்கும் நடைபெறவுள்ள தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர்கள் மு.கா, ஐ.தே.க, ஐ.ம.சு.மு, ஜே.வி.பி, த.தே.கூ, என எல்லா கட்சிகளிலும் போட்டியிடுவார்கள். இதனால் முஸ்லிம்களின் வாக்குகள் பல கட்சிகளுக்கும் அளிக்கப்படும். கட்சிகளில் போட்டியிட்ட வேட்பாளர்களிடையே முஸ்லிம் வேட்பாளர்கள விருப்பத் தெரிவு வாக்குகளை; குறைவாகவே பெற்றுக் கொள்வார்கள்.
மு.கா தனித்துப் போட்டியிட முடிவு எடுத்துக் கொண்டுள்ளது. இதனைத் தவிர்த்து ஆளும் ஐ.ம.சு.கூட்டமைப்பில் போட்டியிடச் செய்ய வேண்டமென்ற முயற்சிலேயே றிசாட் பதியுதீன் ஈடுபட்டுள்ளார். ஆனால், மு.கா அரசாங்கத்துடன் இணைந்து போட்டியி;ட்டால் இன்றைய களநிலையில் தங்களின் வாக்;கு வங்கியில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்திவிடுமென்ற கணிப்பில் மு.கா இருந்து கொண்டிருக்கின்றது.
இதே வேளை, மு.கா அரசாங்கத்தோடு இணைந்தே போட்டியிட வேண்டுமென்ற கோரிக்கையை வன்னிப் பிரதேசத்தில் உள்ள மு.காவின் ஆதரவாளர்கள் முன் வைத்துக் கொண்டு ஹக்கிமுக்கு அழுத்தங்களைக் கொடுத்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றன. இதற்கு மு.காவில் உள்ள சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பின்னணியில் இருந்து கொண்டு தொழிற்பட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
இதே வேளை, அரசாங்கத்தோடு மு.கா இணைந்து போட்டியிடாது விட்டாலும் முஸ்லிம்களின் பெரும்பான்மை வாக்குகள் ஐ.தே.கவுக்கு சென்று விடக் கூடாதென்ற கணிப்பில் அரசாங்கத்தரப்பினர் உள்ளார்கள்.
முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் மீது நடைபெற்றுக் கொண்டிருக்கும் தாக்குதல்களை தூக்கிப் பிடித்து முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வது ஐ.தே.கவின் கணிப்பீடாகும்.
இவ்வாறு முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்கு அரசியல் கட்சிகள் திட்டமிட்டுக் கொண்டு வருகின்றனவேயன்றி, முஸ்லிம்கள் எதிர் கொண்டுள்ள கெடுபிடிகளுக்கு தீர்வினைப் பெற்றுத் தருவதற்கான உறுதி மொழிகளை வழங்குவதற்கு எந்தக் கட்சியும் தயராகயில்லை. முஸ்லிம்களை கறி வேப்பிலையாகவே எல்லாக் கட்சிகளும் எல்;லாத் தேர்தல்களிலும் கையாண்டு வருகின்றன.
மாகாண சபைகளின் அதிகாரங்களை குறைப்பதற்கு 13வது திருத்தச் சட்ட மூலத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தன. இந்தியாவின் ஆதிக்கத்தின் காரணமாக அதனை அரசாங்கம் தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில் கிழக்கு மாகாண சபையின் மு.காவின் உறுப்பனரும், திவிநெகும சட்ட மூலம் கிழக்கு மாகாண சபையில் நிறைவேறுவதற்கு அரசாங்கத்தின் சக்தியாகத் தொழிற்பட்டவருமான ஏ.எம்.ஜெமீல் மாகாண சபைகளின் அதிகாரங்களை குறைப்பதற்காக 13வது திருத்தச் சட்ட மூலத்தில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடாதென்று தனிநபர் பிரேரணை ஒன்றினை கிழக்கு மாகாண சபையில் 23.07.2013இல் கொண்டு வர இருந்தார். ஆனால், அப்பிரேரணை கொண்டு வரப்படவில்லை. இந்த பிரேரணையை கொண்டு வருவதற்கு அரசாங்கம் விரும்பவில்லையாம். இதனால், அதனை கிடப்பில் போடும் நிலை ஜெமிலுக்கும், மு.காவிற்கும் ஏற்பட்டுள்ளது.
ஆதலால், அரசாங்கத்தோடு இருக்கின்ற முஸ்லிம் கட்சிகளுக்கும், அமைச்சர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சுயமாக எதனையும் செய்ய முடியாது. எதனைச் செய்வதாக இருந்தாலும் அரசாங்கத்தின் அனுசரணை அவசியமாகும். ஆனால், அரசாங்கத்தில் உள்ள பௌத்த இனவாதக் கட்சிகள் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சி நடவடிக்கைகளை யாருடைய தயவுமின்றி செய்து கொண்டிருக்கின்றார்கள். அக்கட்சிகள் அரசாங்கத்தில் இருந்து கொண்டு சுயமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.
இதே வேளை, முஸ்லிம்களின் பிரதேசங்களில் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமாக இருந்தால் மஹியங்கனை பள்ளிவாசலை மீண்டும் திறக்கப்பட வேண்டும். பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். போன்ற விடயங்களைப் பற்றி ஜனாதிபதியுடன் கலந்து பேசுவதற்கு சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி தலைமையில் முஸ்லிம் அமைச்சர்கள் தயாராகிக் கொண்டு வருகின்றார்கள். தங்களின் சந்திப்புக்கான தேதியை ஜனாதிபதியிடம் கேட்டுள்ளார்கள். இப்பத்தி எழுதும் வரை இவர்களை சந்திப்பதற்கான தேதி வழங்கப்படவில்லை.
முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களுக்கு முற்றுப் புள்ளியும், மஹியங்கனை பள்ளிவாசலை மீண்டும் திறக்கச் செய்தல் ஆகியவற்றில் பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்புக்கள் வழங்கப்படும். இனி எந்தப் பள்ளிவாசலும் தாக்கப்படாதென்று அரசாங்கம் வழக்கம் போல் இலகுவாக சொல்லிக் கொள்ள முடியும். ஆனால், மஹியங்கனை பள்ளிவாசல் விடயத்தில் அவ்வாறு கூறி கொள்ள முடியாது. பள்ளிவாசல் மீண்டும் திறக்கப்பட வேண்டும். அங்கு தொழுகைகள் இடம்பெற வேண்டும்.
இதனைச் செய்கின்ற போது அரசாங்கம் பொதுபல சேன போன்ற பௌத்த இனவாத அமைப்புக்களின் எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொள்ள வேண்டியேற்படும். இதனால், வடமத்தி, மத்திய மாகாணங்களில் உள்ள பௌத்த சிங்கள இனவாதிகளின் வாக்குகளை இழக்க வேண்டியேற்படும். இன்றைய தேர்தல் களத்தில் அரசாங்கம் இந்த வாக்குகளை இழக்க விரும்பாது. சிறுபான்மையினரின் வாக்குப் பலத்தால் ஆட்சியை அமைப்பதனை விடவும் பெரும்பான்மையினரின் வாக்குப் பலத்தால் ஆட்சியை அமைத்துக் கொள்வதற்கே ஐ.ம.சு.கூட்டமைப்பு விரும்புகின்றது.
இந்த நாட்டின் ஆட்சியை தீர்மானிக்கின்ற சக்தியாக சிறுபான்மையினர் இருக்கக் கூடாதென்பதில் பேரினவாத பௌத்த இனவாதிகள் உறுதியாக இருந்து கொண்டிருக்கின்றார்கள். ஆதலால், ஜனாதிபதி முஸ்லிம்களின் பிரச்சினைகளில் எந்த முடிவினை எடுத்துக் கொண்டாலும் இழப்புக்களை சந்திக்க வேண்டியுள்ளது. ஆயினும், முஸ்லிம்களின் வாக்குகளுக்காக சிங்கள பௌத்த இனவாதிகளின் வாக்குகளை இழக்க மாட்டார். அவர்களின் எதிர்ப்பை வாங்கிக் கொள்ளவும் மாட்டார். இன்று சிங்கள மக்களிடையே இனவாதக் கருத்துக்கள் பௌத்த இனவாத அமைப்புக்களினால் மிகவும் வேகமாகப் பரப்பப்படடுக் கொண்டிருக்கின்றன. ஆதலால், ஜனாதிபதி முஸ்லிம்களின் பிரச்சினைகளை தந்திரமாக கையாள்வதற்கே விரும்புவார்.
இதே வேளை, நாட்டின் இன்றைய நெருக்கடியான சூழலில் முஸ்லிம்கள் தங்களுக்கான மக்கள் பிரதிநிதியை பெற்றாக வேண்டியுள்ளது. முஸ்லிம்கள் தங்களுக்கான மக்கள் பிரதிநிதியை பெற்றுக் கொள்ளாது விட்டால் சிங்கள பேரினவாதமும், தமிழ் பேரினவாதமும் முஸ்லிம்களின் அரசியல் பிரச்சினைளுக்கும், ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வினை முன் வைக்காது பிரதிநிதித்துவம் இல்லாதவர்கள் என்று புறக்கணிக்கவும் செய்வார்கள்.
ஆதலால், முஸ்லிம்கள் தங்களின் மக்கள் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்வதற்கான சாத்தியமான வழிகளைத் காண வேண்டியுள்ளது. இந்த வழிகளை முஸ்லிம் அரசியல் தலைமைகளும் கட்சிகளும் ஒரு போதும் கண்டு கொள்ளாது. அவைகளின் அரசியல் அறிவு மழுங்கிப் போய் பல வருடங்களாகி உள்ளன.
(எம்.எஸ்.சஹாப்தீன்)
